Header Ads



80 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவன் கைது


பேருவளை பொலிஸ் பிரிவில் அளுத்ஹேன மாகல்கந்த பிரதேசத்தில் தனிமையில் வசித்து வரும் 80 வயதான வயோதிப பெண்மணியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 38 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர் இரவு நேரத்தில் வயதான பெண்மணியின் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று, அவரை மிரட்டி, அச்சுறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் திருமணமானவர் எனவும் வயோதிப பெண்மணி வசித்து வரும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


தினக்கூலி தொழிலாளியான சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு வயோதிப பெண்மணி வசித்து வரும் வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு பலவந்தமாக சென்று வன்புணர்வு செய்துள்ளதுடன் பின்னர் தாக்கியுள்ளார்.


தாக்குதலில் பெண்மணியின் இரண்டு பற்களும் உடைந்துள்ளதாக விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் கூறியுள்ளனர்.


பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், வயோதிப பெண்மணியை பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஊடாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.