Header Ads



63 வயதான தாத்தா வேண்டும் - 23 வயது யுவதி அடம்பிடிப்பு, மோதலில் முடிந்த காதல்


- செ.கீதாஞ்சன் -


முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. எனினும், சிறிது காலத்தில், குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது.


இதையடுத்து தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான தாத்தா முறையான நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருப்பதாக பெண்ணின் கணவன், சுமார் ஒரு மாதத்தின் முன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 


கனடாவில் வசித்த அந்த முதியவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் மற்றுமொரு பகுதியில் வசிப்பவர். கனடாவில் நீண்டகாலம் வசித்தவர், தற்போது முல்லைத்தீவில் வசித்து வருகின்றார்


பொலிஸார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழப் போவதாக தெரிவித்தார்.


எனினும், பொலிஸார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறினர். அத்துடன், பெற்றோர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர்.


கடந்த ஒரு மாதமாக வெளித்தொடர்புகள் இல்லாமல் அந்தப் பெண், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த 05ஆம் திகதி இரவு அந்த பெண்ணை கடத்திச் செல்ல வந்ததாக குறிப்பிட்டு,  வாகனமொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகன சாரதியையும் நையப்புடைத்தனர்.


கனடா வாசியின் ஏற்பாட்டில் மற்றுமொரு வாகனத்தில் வந்து அந்த பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டதாக, பெண்ணின் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாடகைக்கு பெறப்பட்ட வாகனமொன்றையே அந்த நபர் செலுத்தி வந்துள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான வாகன சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 06ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.