Header Ads



ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை - வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி


தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர வேண்டியது அவசியமென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.


இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமைச்சர் தெரிவித்தார்.


வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வௌிவிவகார அமைச்சர் கூறினார்.


இதனிடையே, சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் தொழில் நிமித்தம் தென் கொரியாவுக்கு சென்றவர் அல்லவென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் R.P.A.விமலவீர தெரிவித்துள்ளார்.


அவர் கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.


சியோலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் கண்டி உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 27 வயதான முனவ்வர் மொஹமட் ஜினாத் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். 


சியோல் நகரில் இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.