Header Ads



ஜனாஸா எரிப்பு, மலட்டுக் கொத்து, கருத்தடை வரை இனமத பாகுபாடு மேற்கொள்ளப்பட்டது - முஜிபுர் ராஹ்மான்தான் குட்டி பிரேமதாசா


தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இந்த ஆட்சி  முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமெனவே மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும், அதற்கு மாறாக தன்னல விருப்பின்படி தனிப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதல்ல எனவும்,புதிய முறையின் கீழ்,பொருளாதார,சமூக நீதி மற்றும் மனிதநேயத்தை முதன்மைப்படுத்தும் வேலைத்திட்டமே தேவை எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


நேற்று (22) இடம்பெற்ற மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.


பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடந்த மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக் கூட்டத்தினை தொகுதி அமைப்பாளர்,

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்தார்.


இந்நாட்டின் அரசியல்வாதிகளின் மகன்மார்கள் மற்றும் மகள்மார்கள் தத்தமது அரசியல் பிரவேசங்களுக்காக எப்போதும் தங்கள் பெற்றோரின் தேர்தல் தொகுதிகளையே பொறுப்பேற்றனர் எனவும், இந்த வகையில் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதி தனித்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும்,தனது அரசியல் பயணத்தில் கஷ்ட பிரதேசத்திற்குச் சென்று அந்த பிரதேச மக்களைப் பற்றி அறிந்து கொண்டு தன்னல முயற்சியாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தாகவும்,இதற்குக் காரணம் நாட்டுக்கும் மக்களுக்கும் தம்மைப் பற்றி நிரூபிக்க வேண்டியதொரு தேவையிருந்தமையால் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இன,மத,சாதி,வர்க்கப் பிரிவினைகளை ராஜபக்சவினர் உருவாக்கி நாட்டை துண்டு துண்டாக பிளவுபடுத்தி இன,மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவுதான் தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் அவலமான தலைவிதிக்குக் காரணம் எனவும்,தங்கள் குடும்பத்தை முடிசூடவே அவர்கள் விரும்பினர் எனவும்,அதில் எதேச்சதிகாரமும், பிடிவாதமும் பொதிந்திருப்பதாகவும்,அதன் காரணமாக 220 இலடசம் மக்களும் மிகவும் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


மலட்டுக் கொத்து,கருத்தடை நடவடிக்கைகளில் ஆரம்பித்து தகனம்,அடக்கம் வரை இந்த இன,மத பாகுபாடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று பல்வேறு தரப்பினரும் இனவாதம்,மதவாதம் என்று கூக்குரலிடுகின்ற போதிலும் அன்று ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனையவர்கள் அதனை எதிர்க்கவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


22 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் எழு மூளைக்காரரின் பல் ஒன்று பறிபோனதாகவும்,அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும்,முடிந்தால் கொழும்பில் போட்டியிட்டுக்காட்டுமாறும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,படிப்படியாக ராஜபக்ச ஆதிக்கத்தை மக்கள் பலத்தால் இல்லாமலாக்குவதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை, ரணசிங்க பிரேமதாஸவிற்கு பின் மத்திய கொழும்பை திறம்பட வழிநடத்தும் மத்திய கொழும்பின் குட்டி பிரேமதாஸ முஜிபுர் ராஹ்மான் என புதிய பட்டம் சூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்தில் அமையப்பெறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.