Header Ads



போராட்டம் அடங்கி விட்டது, கோட்டாபய மீண்டும் அரசியலில் இறங்கலாம் என கனவு காண்கிறார்கள்


போராட்டக்காரர்கள் அடங்கி விட்டார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் சுதந்திரமாக அரசியலில் இறங்கலாம் என்றும்  அரசாங்கம் கனவு காண்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “போராட்டக்காரர்களின் கொதிநிலை இன்னமும் அடங்கவில்லை, நாட்டை நாசமாக்கிய ராஜபக்சர்களை அவர்கள் சும்மா விடமாட்டார்கள்.


ராஜபக்சர்கள் மட்டுமல்ல இந்த அரசாங்கமே கூண்டோடு நாட்டை விட்டு தப்பியோடும் நிலை வரும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அவசரமாக அழைத்ததன் உண்மையான நோக்கம் என்ன?


அடுத்த மாதம் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரிய கோட்டாபயவை நாட்டுக்கு அவசரமாக அழைத்துள்ளது. இந்த அவசர அழைப்பின் பின்னணி என்ன?


மக்களுக்குப் பயந்தே, நாட்டைவிட்டுத் தப்பியோடிய ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய விலகியிருந்தார்.


அவர் மீண்டும் நாட்டுக்கு வர விரும்பவில்லை. இந்நிலையில், அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்கி அவரை அரசாங்கம் ஏன் மீள் அழைத்தது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.