Header Ads



இலங்கை தொடர்பில் இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் (Michelle Bachelet) அறிக்கை இன்று -07- வௌியிடப்பட்டது.


இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான மறுசீரமைப்புகள்  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மனித உரிமைகளை பாதுகாக்கவும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் புதிய அரசாங்கம் தேசிய கருத்தாடலுக்கு செல்ல வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.


அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையில், புதிய பிரவேசத்திற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


நாட்டில் நிறுவனங்களையும் பாதுகாப்பு பிரிவையும் மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


தராதரம் இன்றி நாட்டின் அனைவரையும் பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளதாகவும் அதில் இருந்து மீள்வதற்கு ஊழலை ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், கடுமையான பாதுகாப்பு சட்டங்களில் தங்கியுள்ளமை மற்றும் அறவழி போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாடுகளை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை கைது செய்யவும் பொதுமக்களின் போராட்டங்களை அடக்கவும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் வகையில் சட்டங்களை வகுக்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்  இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


சட்டங்களை வகுக்கும் செயற்பாடு உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுயாதீனமாகவும் செயற்றிறனாகவும் செயற்பட அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் காணப்படும் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் இராணுவம் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் அங்கு நிலவும் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை, இம்முறை அமர்வுடன் நிறைவிற்கு வருகின்றது.


பிரித்தானியா தலைமையிலான ஒருங்கிணைந்த நாடுகள் இந்த பிரேரணையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்ததுடன் அந்த தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில், இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.


பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையூடான தீர்வுகளுக்கே தாம் இணங்குவதாகவும் சர்வதேச பொறிமுறையை தாம் நிராகரிப்பதாகவும் ஜெனிவா செல்வதற்கு முன்னர் வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. 


மிகவும் காட்டமான முறையில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாகவும் பொறுப்புக்கூறல் விடயத்தோடு பொருளாதார குற்றங்களும் இம்முறை இணைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் குறிப்பிட்டார். 


அறிக்கையின் அடிப்படையில் புதிதான காத்திரமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். 

No comments

Powered by Blogger.