Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 மாத கால அவகாசம்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், 10 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.


இதற்கமைய தற்போதும் நாடாளுமன்றினை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 03 மில்லியன் ரூபாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 04 மில்லியன் ரூபாவும், உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 03 மில்லியன் ரூபாவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நிலுவைத் தொகையினை பெற்றுக்கொள்வதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருடனும் நேரடியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நீர் கட்டணத்தினை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் நேரடியாக கலந்துரையாடியுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு மாதங்கள் வரை கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீர் கட்டணத்தினை செலுத்த தவறும் பட்சத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


அத்துடன் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலங்களில் வசிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்தும் செலுத்தப்படாத நிலுவை நீர்க்கட்டணங்களை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இதுவரை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு மொத்தமாக 5200 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை கட்டணமாக காணப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.