Header Ads



மு.கா - ஜனாதிபதி சந்திப்பில் பேசப்பட்டது என்ன..?


முஸ்லிங்களின் காணிப்பிரச்சினைகள் தொடக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருடன் ஆழமாக கலந்துரையாடியதாக தெரிவித்தார்.


மேலும் அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய ஆசன உரையை பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் ஜனாதிபதியிடம் முஸ்லிங்கள் சார்பில் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சம்மாந்துறை மற்றும் மூதூர் போன்ற உள்ளுராட்சி மன்றங்களின் தரமுயர்த்தல் உட்பட ஏனைய சில உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள நிர்வாக முரண்பாடுகளை தீர்த்தல், கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களில் உள்ள நிர்வாக முரண்பாடுகளுக்கு தீர்வை காணுதல், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கும், மீனவர்களின் மீன்பிடிக்குமான எரிபொருளை தங்குதடையின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல், முஸ்லிங்களின் காணிப்பிரச்சினைகள் உட்பட முஸ்லிங்களின் முக்கிய பல பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை நாடி கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.


இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தொளபீக், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், உயர்பீட உறுப்பினர் நயீமுல்லா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


நூருல் ஹுதா உமர்


No comments

Powered by Blogger.