Header Ads



மரண தண்டனை கைதி விடுதலை - மைத்திரியிடம் சி.ஐ.டியினர் விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டுள்ளது.


றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷாமன் அந்தனி ஜயமஹா என்ற கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த விடயத்தில் இலஞ்சம் பெற்றமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் ஆகியோர் செய்த இரண்டு முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில், றோயல் பார்க் வழக்கில மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷாமந்த அந்தனி ஜயமஹாவை விடுதலை செய்ய ஒரு தரப்பு பணத்தை பெற்றுக்கொண்டதாக தனக்கு தகவல் கிடைத்தது எனவும் புலனாய்வுப் பிரிவினர் மூலம் பெறப்பட்ட அறிக்கையில் அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.


அத்துடன் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துரலியே ரதன தேதரர் பற்றியும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இதன் காரணமாகவே அத்துரலிய ரதன தேரர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்தார்.


அதேவேளை இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார்.


இந்த நிலையில் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் நேற்று வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.


கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியல் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டார்.


தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு, தலையை சுவரில் பலமாக மோத செய்து, யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது. 

No comments

Powered by Blogger.