Header Ads



கோட்டாபய குறித்து அம்பலப்படுத்தும் உதயங்க வீரதுங்க


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல்களின் போது தரகு பணம் பெறுவதற்காக விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் அறையை மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.


சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.


மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கலுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் சிங்கப்பூரில் இருக்கின்றனர். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் ஹோட்டல் கட்டணங்களை இவர்களே செலுத்துவார்களாக இருக்கலாம்.


அப்படி இல்லை என்றால் எப்படி ஹோட்டல் கட்டணத்தை செலுத்துவது. மிக் விமான கொள்வனவு கொடுக்கல், வாங்கல் தொடர்பான விடயங்களை மூடி மறைக்க அன்றைய நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வித்தியலங்காரவுக்காக பெருமளவில் பணத்தை செலவிட்டனர்.


அவர் மிரிஹானவில் உள்ள கோட்டாபயவின் வீட்டுக்கு சென்றுள்ள போதிலும் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை. பீ. அறிக்கையில் கோட்டாபயவின் வாக்குமூலம் இல்லை.


எனக்கு அந்த கொடுக்கல், வாங்கலுக்கும் எந்த சம்பந்தமில்லை. மிக் விமானங்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியது யார்? அதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தது யார்?.


உக்ரைனில் இருந்து மிக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்த போது அறைக்குள் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது யார்?. அவர்கள் இலங்கை வந்து பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று என்னுடன் பேசவில்லையே. மிக் கொடுக்கல், வாங்கலில் பிரதான சூத்திரதாரி கோட்டாபய. ஏன் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லையே.


மிக் கொடுக்கல், வாங்கல் தொடர்பான மோசடி வழக்கில் 7 சந்தேக நபர்கள் இருக்கின்றனர். அவர்களில் நான் ஒருவன் மாத்திரமே இலங்கையில் இருக்கின்றேன்.


இவர்களில் நான்கு பேர் சிங்கப்பூரில் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பித்துள்ளனர்.


கோட்டாபயவிடம் தனிப்பட்ட ரீதியில் நன்மையடைந்தவர்களே அவருக்கு தற்போது பணத்தை செலவு செய்து வருகின்றனர். மாலைதீவு, தாய்லாந்து, சிங்கப்பூர் ஹோட்டல்களுக்கு இவர்களே பணத்தை செலவு செய்துள்ளனர்.


கோட்டாபய ஏன் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும்?. சிங்கப்பூர் என்பது சிறிய நகரம், ஏன் அதனை தெரிவு செய்ய வேண்டும். உலகில் எத்தனை நாடுகள் இருக்கின்றன?.


அங்கு அவரை உபசரிக்கக் கூடியவர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் சிங்கப்பூரை தெரிவு செய்தார். கோட்டாபய ராஜபக்ச ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்துள்ளார்.


அந்த கடவுச்சீட்டு இருந்தால், எந்த நாட்டுக்கும் செல்வதற்கான விசா அனுமதி கிடைக்கும். தாய்லாந்தில் மூன்று மாத கால விசா வழங்கப்பட்டுள்ளதே.


முன்னாள் ஜனாதிபதியை சுற்றி இருந்த அவரது அடிவருடிகளுக்கு அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தும் தேவை இருக்கின்றது.


லலித் வீரதுங்க மற்றும் காமினி செனரத் ஆகியோர் ஜனாதிபதியிடம் இருந்துகொண்டு நன்றாக சம்பாதித்துக்கொண்டனர் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.