ஓவராக பொங்காமல் உட்காருங்க..!
- Mohana Dharshiny -
இந்தப் போராட்டத்தின் வெற்றி சும்மா கிடைக்கவில்லை. 90 நாட்களாக மக்களிடமும் சமூக வலைதளங்களிலும் எவ்வளவோ பிரசாரங்கள் நடத்தப்பட்டன.
கோட்டாகோகம வில் தொண்ணூறு நாட்கள் தங்கியிருந்து போராடியவர்கள் பலர்.
போராட்டத்தில் தமிழ் மக்களையும் இணைக்க எவ்வளவோ பேசியிருக்கிறோம்.
வாக்குவாதப் பட்டிருக்கிறோம்.
எழுதியிருக்கிறோம்.
இன்றைய வெற்றி சும்மா வந்து விடவில்லை. மே ஒன்பது சிலர் உயிர் பறிக்கப்பட்டது.
இன்று மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் இருக்கின்றனர்.
ஒரு இளைஞர் தலையில் குண்டடி பட்டு இறந்திருக்கிறார். எத்தனை பெறுமதியான உயிர்கள் போயிருக்கின்றன.
கோட்டாவை காப்பாற்ற வந்த ரணிலால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரமுடியவில்லை. எரிபொருள் வரிசையில் 16 உயிர்கள் போயிருக்கின்றன.
விசர்நாய்க் கடிக்கு மருந்து இல்லாததால் 8 பேரும் பாம்பு விசத்திற்கான அலர்ஜி மருந்து இல்லாததால் 20 பேரும் இறந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எரிபொருள் இல்லாத காரணத்தால் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாமல் இரண்டு நாள் குழந்தை உட்பட பலர் மரணித்து விட்டார்கள்.
இதெல்லாம் இழப்பாக தெரியாத மத்தியதர வர்க்க புத்திஜீவிகள் இன்று ரணில் வீடு தீ வைக்கப் பட்டதற்கு ஒப்பாரி வைக்கிறார்கள்.
இரண்டு அறையில் புத்தகங்கள் இருக்கிறதாம். யாழ் நூலகத்தில் பதினாறாயிரம் புத்தகங்கள் இருந்தன. ஏன் மே 9 தீ வைக்கப்பட்ட கோட்டாகோகம நூலகத்தில் பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.
ரணிலின் மனைவி வீட்டினுள் இருப்பது துயரம் தான், ஆனால் எப்படியும் அவரை காப்பாற்றி விடுவார்கள். ஆனால் கோட்டாவை காப்பாற்ற பின்கதவால் வந்த ரணில் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிலும் இன்றும் இறந்த உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா?
அந்தக் கேள்வியைக் கேட்க துப்பில்லாதவர்கள் பலர் ரணிலின் வீட்டுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
இன்று அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஆறு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருக்கிறார்கள்.
அதற்கு யார் பொறுப்பு?
உங்களுக்கு விஐபி உயிர்களும் உடைமைகளும் பறிபோனால் அவ்வளவு அனுதாபம் வந்துவிடும்.
தீ வைப்பு ஏற்கத்தகாத தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செயல் தான்.
ஆனால் அதற்காக இந்தப் போராட்டத்தின் ஒட்டு மொத்த தியாகத்தையும் உங்கள் கழிவிரக்க கண்ணீரால் ஊத்தி மூடிவிட அவசியமில்லை.
ரணிலின் வீடு அவரது கல்லூரிக்கு எழுதி வைக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அந்தக் கல்லூரி ஒன்றும் கழிவரை கூட இல்லாத, ஒழுகும் கூரையுடன் இயங்கும் கிராமப்புற பாடசாலை அல்ல.
தவிற ரணிலுக்கு இருக்கும் சொத்தை மதிப்பிட்டால் இன்னும் நூறு கல்லூரிகளையே கட்டலாம்.
ஆகவே உங்கள் அனுதாபத்தை மக்கள் மீது செலுத்துங்கள்.
கீழே இன்று தலையில் சுடப்பட்ட இளைஞனின் ரத்தம் இருக்கிறது.
என் இதயத்திற்கு அந்தத் தீயினால் கூட இந்த ரத்தத்தின் ஈரத்தை இல்லாமல் செய்ய முடியவில்லை.
ஆகவே ஓவராக பொங்க வைக்காமல் 🙊🙊🙊 உட்காருங்க.
Post a Comment