லங்காபுர பிரதேச செயலக பெண் நிர்வாக அதிகாரி கொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக பெண் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (04) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
நபர் ஒருவர் அறையில் இருப்பதைக் கண்டதாகவும் இருளில் அவரை அடையாளம் காண முடியவில்லையென உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் யமுனா பத்மினி எனும் 42 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அவர் இறுதியாக, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை, லங்காபுர பெண் பிரதேச செயலாளருடன் ஹிங்குராக்கொட புகையிரத நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் கடமையில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இக்கொலை என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டு என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் லங்காபுர புலஸ்திபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ. பத்திரண தெரிவித்தார்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒஷான் ஹேவாவிதாரணவின் பணிப்புரைக்கமைய விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Post a Comment