Header Ads



ஜனாதிபதி தனது கையொப்பத்துடன் கூடிய இராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் கையளித்தால் மாத்திரமே பதவி வெற்றிடமாகும்


நேற்றைய தினம் (09) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் ஊடக நிறுவனங்கள் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்த வகையிலும் வன்முறைச் சம்பவங்களை அனுமதிக்க முடியாது எனவும் வன்முறைகள் மூலம் நாட்டில் ஸ்திரமற்ற நிலையே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலைமைகளால் நாட்டின் பிரஜைகள் மத்தியில் உள்ள ஒற்றுமை சீர்குலையும் என்பதோடு, நாட்டின் பொருளாதார நிலைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு தொடர்பிலான சர்வதேசத்தில் உள்ள நற்பெருக்கு களங்கம் ஏற்படும் என்பதால், இந்த வன்முறைகளுக்கு துணை போக வேண்டாம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி பதவி விலகுவதாக இருந்தால், ஜனாதிபதி தனது கையொப்பத்துடன் கூடிய இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதன்போது கூறினார்.

அவ்வாறு கையளித்தால் மாத்திரமே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவி விலகியதும் பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். பிரதமரால் அவ்வாறு செயற்பட முடியாவிட்டால், சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டதும் ஒரு மாதத்திற்குள், தகைமையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டது.

பாராளுமன்றத்தில் ஒரு மாதத்திற்குள் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த வாக்கெடுப்பில் வெற்றியீட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் 225 உறுப்பினர்களும் வாக்களிப்பார்களாயின், அவர்களில் 113 பேரின் வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவாக முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கையின் வரலாற்றில் ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதி பதவி வெற்றிடமானது என்பதை சுட்டிக்காட்டிய அவர், 1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிரிழந்ததை அடுத்தே அந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறினார்.

ஜனாதிபதி பதவி விலகுவது முதல் புதிய ஜனாதிபதி நியமனம் வரையான செற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் காலம் தாழ்த்தாமல் புதிய ஜனாதிபதி தெரிவை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், நாட்டின் பாரதூரமான தன்மையை புரிந்துகொண்டு செயற்படுமாறும் இலங்கை சட்டத்தரணிகள் அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.