Header Ads



காதலை எதிர்த்த தந்தை - வெட்டிக் கொலைசெய்த மனைவியும், மகனும் கைது


பாலித ஆரியவன்ஸ

பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த பெண்ணும் அவரது மகனும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்திலுள்ள காட்டிலிருந்து ஜூன் மாதம் 16ஆம் திகதி, சடலமொன்று மீட்கப்பட்டிருந்ததுடன், அது மிருகங்களால் கடித்து சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்த சடலம் தொடர்பில் பதுளை நீதிமன்ற அறிக்கையின் பின்னர், பதுளை நீதவான் சுஜித் த சில்வா, இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையிலேயே சந்தேகநபர்கள் கடந்த முதலாம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கமைய, தனது மகனின் காதலுக்கு தந்தை எதிர்ப்பை தெரிவித்த்துடன், தனது மகனை துன்புறுத்தியதாகவும் இதனால் கணவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தாகவும் சந்தேகநபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 31ஆம் திகதி இரவு இந்த கொலையை செய்ததுடன், மறுநாள் இரவு மகனுடன் சேர்ந்து சடலத்தை காட்டில் வீசியதாகவும் அன்றைய தினமே பொலிஸ் நிலையத்தில் தனது கணவனைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயும் மகனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 

No comments

Powered by Blogger.