Header Ads



வாக்குறுதி மீறாத நேர்மையே, ரணிலை இந்தளவு உயர்த்தியிருக்கிறது - அசாத் சாலி வாழ்த்து


நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் தெரிந்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்தி, அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

"முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல பாதைகளை கடந்து வந்தவர். அரசியலில் எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும், ஒருநாளும் அவர் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்ததில்லை. முக்கியமான காலகட்டத்தில் பல தியாகங்கள் செய்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு. மட்டுமல்ல நெருக்கடியான நேரங்களில்கூட துணிந்து நின்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது முன்னுதாரணம், அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது.

வாதத்திறமையும், வாக்குறுதி மீறாத நேர்மையும்தான் அவரை இந்தளவு உயர்த்தியிருக்கிறது.

சர்வதேசத்தில் அவருக்குள்ள செல்வாக்கினால் நமது நாட்டு நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வியூகங்களை வகுப்பார் என்ற நம்பிக்கை எனக்குமட்டுமல்ல, பாராளுமன்றத்துக்கும் உள்ளது. இந்த நம்பிக்கைதான் அவரை இன்றைய வாக்கெடுப்பில் வெற்றியீட்ட வைத்துள்ளது.

வென்றகையோடு சகல கட்சிகளையும் ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதி அழைத்திருப்பது ஜனநாயகவாதிக்குள்ள பண்பையே எடுத்துக்காட்டுகிறது

எனவே, இனியாவது அரசியல் பேதங்களை மறந்து, நமது நாட்டு நெருக்கடியை தீர்க்க சகலரும் புதிய ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகப்பிரிவு-

No comments

Powered by Blogger.