நாமலின் யோசனையை தூக்கிவீசிய கட்சிகள்
இந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்வைத்த யோசனையை விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டுக் கட்சிகள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பில் இந்த அரசாங்கத்தை அகற்றிவிட்டு, பொதுஜன கட்சியின் பங்காளிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான யோசனையை தெரிவித்ததுடன், கூட்டு கட்சிகளுடன் இதுகுறித்து கலந்துரையாடும்படி நாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற சுயாதீன கூட்டு கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கட்சித் தலைவர்களுக்கு நாமலின் யோசனையை அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரேரணையை அனைத்து கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சித்ததுடன், யோசனையை நிராகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள், இந்த நெருக்கடிக்கு ராஜபக்சக்களே முழு காரணம் என்பதால் அவர்களுடன் இணைந்து இனி ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாமல் ராஜபக்ச எம்.பியுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்துவதில்லை என கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -காவியன்-
Post a Comment