Header Ads



பதுங்கு குழிக்குள் மஹிந்த, கோட்டாபயவை விட மோசமான நிலைமை ரணிலுக்கு ஏற்படும்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பாடுகள் காரணமாக நாடு சிவில் போர் ஒன்றை நோக்கி தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜூலை 15 ஆம் திகதி புதிய பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கொழும்பு வாலுக்காரம விகாரையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

குறைந்தது இரண்டு நாட்களுக்காகவது ஜனாதிபதியாக பதவிக்கு வர வேண்டும் என்ற சிறுப்பிள்ளை தனமான எதிர்ப்பார்ப்புடன் அவர் ஜனாதிபதி பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டார்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரவில்லை.

ரணில் விக்ரமசிங்க செல்லும் பாதை எங்கு போய் முடியும் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்வார்கள். ரணில் விக்ரமசிஙக் செல்ல நினைக்கும் பாதை காலம் தாழ்ந்து விட்ட பாதை.

ரணில் தன்னை புதுப்பித்துக்கொள்ளவில்லை. தற்போதைய காலம் 83 ஆம் ஆண்டு போல் மக்களை கொன்ற காலம் என அவர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்

88,89 ஆம் ஆண்டுகளில் பட்டலந்தை சித்திரவதை முகாமில் கொலை செய்த காலம் என நினைத்துக்கொண்டிருக்கின்றார். இல்லை, இது 2022 ஆம் ஆண்டில் இருக்கும் இலங்கை.

இந்த காலத்தில் விளையாட முடியாது.அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிஙக் முற்றாக மீறியுள்ளார்

அவரை ஜனாதிபதியாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தமது பாதுகாப்புக்காக ரணிலை வைத்துககொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுன நினைத்துக்கொண்டிருக்கின்றது.

மக்கள் ஆணைக்கு தலைவணங்குவதன் மூலம் பாதுகாப்பு இருக்கும் என்பதை நாங்கள் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் இணைக்கப்பாட்டுக்கு வந்தாலேயே பாதுகாப்பு இருக்கும். ரணில் அல்லது வேறு ஒருவரை கொண்டு 10,15 இராணுவத்தினரை அழைத்து அருகில் வைத்துக்கொள்வதால், பாதுகாப்பு கிடைக்காது.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை இல்லை. கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச பதுங்குகுழிக்கு ஒளிந்துக்கொண்டிருக்கின்றார்.

பசில் ராஜபக்ச எப்படி இலங்கையில் இருந்து தப்பிக்க முடியும் என்று விமான நிலையங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார். படகில் ஏறி அகதியாக இந்தியாவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

ரணில் விக்ரமசிங்கவினால், பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்க முடியும் என எவராவது நினைத்துக்கொண்டிருந்தால், அது பைத்தியகாரத்தனம். பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டங்கள் தற்போது முடிந்து விட்டது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததை நாம் பார்த்தோம். இப்படியே சென்றால், இதனை விட மோசமான நிலைமை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்படும். ரணில் காரணமாக நாடு சிவில் போரை நோக்கி தள்ளப்படும் ஆபத்து உள்ளது.

தனி நபரின் அதிகார ஆசைக்காக முழு நாட்டையும் அழிக்க இடமளிக்க முடியாது. பொது மக்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவது ரணிலின் திட்டம்.

பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் கடவுச்சீட்டில் முத்திரையிட மறுத்தனர். அவர்கள் போராட்டத்தில் இருந்தவர்கள் அல்ல, அதனை ஆசிர்வதித்தவர்கள்.

விமான சேவை நிறுவனங்கள் தமது விமானத்தில் பசில் ராஜபக்சவை ஏற்ற மறுத்தன. இந்த விமானப் பணிப்பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் அல்ல. போராட்டத்திற்கு பொதுவாக மிகப் பெரிய ஆசிர்வாதம் இருந்தது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கட்சி என்ற வகையில் நாங்கள் விசாரணை நடத்துவோம். இரும்பு கம்பிகளால் இராணுவத்தினரை தாக்கும் தீர்மானம் எப்படி எடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு வெளியில் இருந்து சம்பந்தப்பட்ட அமைப்பு எது. யார் துப்பாக்கிகளை பறித்தது. பறித்த துப்பாக்கிகளுக்கு என்ன ஆனது. இதனை யார் செய்தார்கள் என்பது நாங்கள் வெளியிடுவோம்.

அரசியல் ஆதரவுள்ள ஒரு நபருக்கு சொந்தமான பிரசார நிறுவனம் போராட்டகாரர்கள் இராணுவத்தை தாக்கினர் என்று தற்போது சமூக ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

இவற்றில் உள்ள தொடர்புகளை நாங்கள் விரைவில் அம்பலப்படுத்துவோம். இவை அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் விளையாட்டுக்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்றவர்களுக்கும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்துவது அவரது திட்டம்.

பொலிஸாருக்கு போராட்டகாரர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் திட்டம். மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அவை முற்றிலும் திட்டமிட்ட சம்பவங்கள். அலரி மாளிகை மோதல் இவை அனைத்தும் திட்டமிட்ட சம்பவங்களாக என்பதை தேடி அறிய வேண்டும். அனைத்தையும் துண்டு துண்டாக பிளவுப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்துவதே ரணிலின் உத்தி எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.