Header Ads



ரணிலுக்கு சுயமரியாதை உள்ளதா..? கட்சிகளை உடைத்து மாற்றுக் கட்சியினரை திரட்ட முயற்சி, பணமும் தயாராக உள்ளது


பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி, அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ரணில். விக்ரமசிங்க, அமைச்சரவையில் இணையுமாறு இதுவரை கட்சிகளை அழைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். விக்ரமசிங்கவிற்கு சுயமரியாதை இருந்தால், இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளை உடைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை, தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். இதற்கான நிதியும் தயாராக உள்ளது. எனவே அவ்வாறு அமைக்கப்படும் அரசாங்கத்துக்கு உலகில் யாரும் உதவ மாட்டார்கள் என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த சேனாரத்ன, இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே என்று குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க அவர் தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் பிரதமரை நியமிப்பதற்கான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.