Header Ads



ஹரினுக்கு எதிராக பொன்சேகா முறைப்பாடு


ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் தம்முடன் மோதலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று (02) தெரிவித்தார்.  

ஹரினுக்கு எதிராக கட்சித் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் ஊடகவியலாளர்களிடம் பொன்சேகா தெரிவித்தார். 

பொதுமக்கள் முன்னிலையில் என்ன பேச வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதை ஹரின் எம்.பி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மே தினப் பேரணியில் தயாரிக்கப்பட்ட பேச்சாளர் பட்டியல் தொடர்பாக அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கட்சியிலுள்ள சில உறுப்பினர்களின் பிம்பத்தை அதிகரிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்வரிசை எம்பிக்கள் சிலர் பேரணியிலிருந்து வெளிநடப்பு செய்தாகவும் தானும் அதற்கு கண்ணியமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஹரின் தவறாக நடந்து கொண்டதாக பொன்சேகா குறிப்பிட்டார். 

ஹரின் எம்.பி, கம்பஹா மாவட்டத்துக்கு வந்த பின்னர் இந்த முரண்பாடு ஏற்பட்டதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது தொடர்பில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் பொன்சேகா தெரிவித்தார்.

இதேவேளை, பேச்சாளர் பட்டியல் கட்சியில் குறிப்பிட்ட நபர்களின் நன்மதிப்பை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதை மறுத்த ஹரின் எம்.பி, பேரணிக்கும், முழு மாநாட்டுக்கும் தானே செலவு செய்ததாகக் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.