Header Ads



மஹிந்தவுக்கு கௌரவ பிரியாவிடை வழங்கச் சென்றபோது, முட்டாள் அரசியல்வாதிகளினால் அது குழம்பியது - பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய ரமேஷ் பத்திரன


காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 

இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்கு முந்திய நாள் அவருக்கு விடைகொடுக்க காலியிலிருந்து ஒரு குழுவையும் அழைத்து தாமும் அலரி மாளிகைக்கு சென்றிருந்ததாக குறிப்பிட்டார். 

இந்த நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றிய பிரதமர் பதவி விலகும் நாளில் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்குவதற்காகவே சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். 

இச்சந்திப்பின் முடிவில் இங்கு வந்த மக்களுக்கு சில முட்டாள் அரசியல்வாதிகள், கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும், இதனையடுத்தே சிலர் காலிமுகத்திடல், தாக்குதலுக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். 

குறித்த போராட்டம் அங்கு ஒரு மாதமாக நடந்து வந்ததாகவும் இந்தப் போராட்டத்தின் மீது கல்லெறியும் எண்ணம் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இல்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நாம் கடைப்பிடித்து வரும் கொள்கை இதுவென அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் குறித்த சந்திப்பிற்கு பிறகு, அவர்கள் வெளியேறும்போது ஒரு குழு போராட்ட பூமிக்கு சென்றது. அப்போது அலரிமாளிகையில் இருந்தேன், அங்கேயே அமர்ந்து தாம் பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோனை தொடர்புகொண்டு இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக இருக்கும், தயவுசெய்து இதை நிறுத்துங்கள் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் தாம் தாக்குதலை தடுக்க அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நான் அந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஜனாதிபதியின் சந்திப்பிற்காக ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க என்னை தொடர்புகொண்டு பெரிய பிரச்சினை வரப் போகிறது என்றும் உடனடியாக ஜனாதிபதியிடம் அறிவித்து இதை தடுத்து நிறுத்துமாறு கூறியதை அடுத்து நான் ஜனாதிபதியிடம் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட போகின்றது எனவே உடனே தலையிட்டு இதை நிறுத்துங்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது எமக்கு முன்னாலேயே தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஜனாதிபதி, என்ன நடக்கிறது, நான் காலையிலேயே இதை நிறுத்த சொன்னேன் அல்லவா என பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோனிடம் கேட்டபோது, ​​அவர் பிற்பகல் 12.40 மணிக்கு பொலிஸ்மா அதிபர் தன்னிடம் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தாக ரமேஸ் பத்திரன தெரிவித்தார். 

இதனையடுத்து தாம் இந்த நாட்டின் ஜனாதிபதி, தனது உத்தரவை நிறைவேற்றுமாறு தெரிவித்த பின்னரே, தாக்குதல்கார்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.