Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய சக்தி பாத யாத்திரை, கண்டி நகரம் நிரம்பி வழிந்தது, நாளை கலிகமுவ நோக்கி பயணிக்கவுள்ளது.


 அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய சக்தி பாத யாத்திரை இன்று(26) கண்டியில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த பாத யாத்திரைக்கு சுமார் ஒரு மணித்தியாலம் முன்னதாகவே ஆயிரக்கணக்கான மக்கள் கண்டிக்கு வருகைத் தந்து கொண்டிருந்தனர். கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு வருகைத் தந்த மக்களால் கண்டி நகரம் நிரம்பி வழிந்தது. காலை 8 மணிக்கு ஆரம்பமாக வேண்டி இருந்த குறித்த பாத யாத்திரை அதிகமான மக்கள் கூட்டம் வருகைத் தந்ததால் 9:30 மணி வரை ஆரம்பிக்க முடியாதிருந்தது. கண்டி பொதுச்சந்தையிலிருந்து ஆரம்பமான பேரணி பிற்பகல் 2 மணியளவில் பேராதனையை வந்தடைந்தது.

பெருந்திரளான மக்கள் கூட்டம் வருகைத் தந்திருந்த காரணத்தால் பாத யாத்திரை பேரணியை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்ததுடன், ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, கிங்ஸ் நெல்சன், நளின் பண்டார, ஹர்ஷ டி சில்வா ஆகிய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. 

வீதியின் இருபுறமும் இருந்த மக்கள், அணிவகுத்துச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பெரும் வரவேற்பளித்ததுடன், தொனிப்பொருளைக் கூறி ஆரவாரம் செய்ததையும் காண முடிந்தது.

பல இடங்களில் குளிர்பானங்களை வழங்கி ஆர்ப்பாட்டக்கார்களின் கலைப்பை போக்குவதற்கு வீதியின் இரு புறமும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் செயற்பட்டதையும் காண முடிந்தது. 

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களிடமிருந்தும் இதேபோன்ற ஆதரவு கிடைத்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தை இந்த பேரணி அண்மித்த போது,  பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவும் புத்திஜீவிகளுடன் இணைந்த பெருந்திரளான மக்கள் எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்றனர்.

இன்று காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புனித புத்தரின் தந்தத்தை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், மாநாயக்கர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிர்வாத பூஜையில் கலந்துகொண்டும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் வரலாற்று சிறப்புமிக்க நாத தேவாலயத்திற்கு சென்று இறை ஆசியையும் பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரரை சந்தித்த ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் பாரிய பாத யாத்திரை பேரணியில் கலந்து கொண்டார்.

கண்டி, பேராதனை, கிரிபத்கும்புர, பிலிமத்தலாவ மற்றும் கடுகன்னாவ ஊடாக மாவனெல்லையில் முதலாவது பாத யாத்திரையை நிறைவு செய்யும் ஐக்கிய பாத நாளை(27) கலிகமுவ நோக்கி பயணிக்கவுள்ளது. 

எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதோடு, சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் மே முதலாம் திகதி 'நூற்றாண்டின் மே பேரணி' நடைபெறவுள்ளது.



No comments

Powered by Blogger.