கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் வீதிச் சமிஞ்சை விளக்கு
(சுலைமான் றாபி)
பொது மக்களின் நன்மை கருதி கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் கடந்த (19) பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஐ.எல். அமீனுல் பாரியின் முயற்சியின் கீழ் குறித்த வீதிச்சமிஞ்சை விளக்கானது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அமையப்பெற்றுள்ள குறித்த பிரதேசமானது அதிக சன நடமாட்டம் உள்ள பிரதேசம் என்பதுடன், கடந்த காலங்களில் இந்த இடத்தில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் கல்முனை ஆதார வைத்தியசாலை, கார்மெல் பற்றிமா கல்லூரி மற்றும் கல்முனை நீதிமன்றங்களுக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் இந்த வீதிப் போக்குவரத்து சமிஞ்சை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தினூடாக பிரதான வீதியினை கடந்து செல்லும் போது ஏற்படும் பல அசௌகரியங்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதுடன், இவ்வீதியால் பயணிக்கும் பிரயாணிகளும், வாகன சாரதிகளும் குறித்த வீதிச் சமிஞ்சை விளக்கின் சைகளை அவதானித்து பயணிக்குமாறு மேலதிக மாகாணப் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஐ.எல். அமீனுல் பாரி, கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ். சிவசுப்ரமணியம், கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் ஆர். முரளீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரசபையின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment