"ஜனாதிபதி கோட்டாபயவை விமர்சிப்பதற்கு, எதிரணிக்கு அருகதையில்லை"
இலங்கையில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் செயற்றிட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இந்தச் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியையும், அரசையும் விமர்சிப்பதற்கு எதிரணியினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் கொரோனாவின் தாக்கம் தற்போது சமூக மட்டத்தில் இல்லை. கடற்படைமுகாமிலும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும்நிலையங்களிலும் இருந்தே தற்போது கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
எனினும், இதன் தாக்கத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அரசுவிரைவில் கொண்டு வந்துவிடும். இந்த நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடெங்கிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. தற்போது சமூக மட்டத்தில் கொரோனாத் தொற்று இல்லாதபடியால் தான் நாடு முழுவதும் ஊரடங்கைத் தளர்த்தும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
அதேவேளை, நாட்டைத் தொடர்ந்து முடக்கிவைத்திருந்து மக்கள்மத்தியில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவும் அரசு விரும்பவில்லை.
இந்தநிலையில், பொதுத்தேர்தலை நடத்தும் நோக்கத்துடன் தான் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என ஜனாதிபதியை எதிரணியினர் வசைபாடுகின்றனர். வங்குரோத்துஅரசியல்வாதிகளான எதிரணியினர், ஜனாதிபதியை விமர்சிக்க அருகதையற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment