எரிபொருள் விலையை 41 வீதத்தால் உடனடியாக குறைக்க வேண்டும் - சஜித்
(ஆர்.யசி)
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலையை 41 வீதத்தால் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்று கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் நடைமுறைகால எண்ணெய் விலையுடன் ஒப்பிடுகையில் இப்போது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் பெற்றோல் 60 ரூபாய்க்கும், டீசல் 70 ரூபாய்க்கும் மண்ணெண்ணெய் 40 ரூபாய்க்கும் வழங்க முடியும்.
எரிவாயு விலையை 30 வீதத்தால் குறைக்க முடியும். அப்படியென்றால் எரிவாயு 1000 ரூபாவிற்கு வழங்க முடியும். ஆனால் அரசாங்கம் தமது செலவுகளை இலகுபடுத்த விலை குறைப்புகளை செய்யாது உள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. ஒரு மாத காலமாக எரிபொருள் விலையை குறைக்க கூறியும் அரசாங்கம் கவனம் செலுத்தாது உள்ளனர்.
நாம் பொதுமக்கள் சார்பில் பேசுகின்றோம். அதனால் தான் யாருமே இது குறித்து பேசாத நேரத்தில் நாம் பாராளுமன்றத்திலும் இங்கேயும் பேசுகின்றோம். ஆகவே அரசாங்கம் மனசாட்சியுடன் செயற்படுகின்றது என்றால், மக்களின் கஷ்டம் என்ன என்பதை உணர முடியும் என்றால் உடனடியாக எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
இல்லையேல் மக்களுடன் இணைந்து அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம். எரிபொருள் விலை குறைவடையும் வரையில் நாம் போராடுவோம்.
Post a Comment