சஜித்தின் கீழிருந்த திணைக்கள நிதி விவகாரம் - விசாரணைசெய்ய 3 பேர் குழுவை நியமித்தார் பிரதமர்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சரான சஜித் பிரேமதாசவின் கீழ் இருந்த மத்திய கலாசார திணைக்களத்தின் நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க தலைமையில் கோட்டாபய ஹரிச்சந்திர, மற்றும் ஹரிகுப்தா ரோகணதீர ஆகியோர் இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தக்குழு தனது விசாரணையை முன்னெடுக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் கலாசார திணைக்கள நிதி சில சமயங்களில் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினாலும் பின்னாளில் சஜித் பிரேமதாசவினாலும் கையாளப்பட்டுள்ளது.
கலாசார திணைக்களத்தின் கட்டுப்பாட்டுச்சபையின் அனுமதி பெறாது கலாசார திணைக்களத்தின் ரூபா 3600 மில்லியனை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தனது பிரசாரத்திற்காக சஜித் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் கலாசார அமைச்சர், குருநாகல் எம்.பி. டி.பி.ஏக்கநாயக்க இது தொடர்பாக கடந்த செப்ரெம்பர் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தார்.
இருப்பினும், மத்திய கலாசார நிதியத்தை பயன்படுத்தியவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகிறார்.இதனால் சஜித் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment