இலங்கை கடவுச்சீட்டு விவகாரத்தில், கோத்தபாயவிற்கு நெருக்கடியா..?
கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வது தொடர்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காது சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடவுச்சீட்டு ஒன்றை கோத்தபாய பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தீர்மானம் மிக்க இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போதைய விசாரணை நிலவரத்தின் பிரகாரம் இந்த சம்பவம் கோத்தபாயவிற்கு பாரதூரமான சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்தும் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணைகளின் போது குடிவரவு திணைக்களம் அத்தியாவசியமான ஆவணங்களை உரிய முறையில் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கணனிக் கட்டமைப்பினை பரிசோதனை செய்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ள உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான இரண்டாம் பீ. அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் கோதபாய மிகவும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment