Header Ads



கஞ்சிப் பானைக்குள் சிறுநீர் கழித்தனர், சோறு போட்ட அப்பக் கடையை உடைத்தனர் (நேரடி ரிப்போட்)

- களத்திலிருந்து பிறவ்ஸ் -

மகளின் திருமண நகைகளை திருடிவிட்டனர்

புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதிக்குட்பட்ட கொட்டாரமுல்லை,  மொரக்கல பிரதேசத்திலுள்ள முதலாவது முஸ்லிம் வீடு ஆறு பிள்ளைகளின் தந்தையான ஏ.ஜே.எம். ஹாரிஸ் என்பவருக்கு சொந்தமானது. இவரது வீடு முற்றாக எரிந்து சாம்பலாக காட்சியளித்தது. தனது மனைவி மற்றும் பிள்ளைகள் சூழ அனைவரும் எங்களை மிகுந்த ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 

“நாங்கள் நோன்பு திறக்க தயாராகும்போது ஓடிவருமாறு முஸ்லிம்கள் எங்களைக் கூப்பிட்டனர். பின்னால் வந்தவர்கள் எங்களை துரத்திக்கொண்டு வந்தார்கள். நான் விழுந்து, விழுந்து ஓடினேன். நாங்கள் எல்லோரும் வீதியில் நின்றுகொண்டுதான் நோன்பு திறந்தோம். மறுநாள் காலையில் வந்து பார்த்தோம் எங்களது வீடு முற்றாக எரிந்து சாம்பலாகக் கிடந்தது” என்று தெரிவித்தார் ஹாரிஸ்.

“தனது மகளின் திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் அடையாளம் போட்ட நகைகள் மற்றும் கூடவைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீடுகளில் தங்கி வருகிறோம். வீடு இல்லாமல் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று அவரின் மனப்பாரத்தை எம்மிடம் இறக்கிவைத்தார் ஹாரிஸின் மனைவி.

…. மாமா வீட்டுக்கு நெருப்பு போட்டார்

கொட்டாரமுல்லை முற்றாக எரிந்த நிலையில் பல வீடுகள் என் கண்முன் காட்சியளித்தன. அதன் உரிமையாளர்களை தேடிச்சென்றபோது 24 வயதுடைய பாத்திமா அஷ்ரிபா இரண்டு கைக்குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்தார். கணவர் இல்லாத நிலையில், தந்தையின் உழைப்பில் வாழ்ந்துவரும் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“கொட்டாரமுல்லைக்கு அடிக்க வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தோம். ஆறு மணியளவில் சிங்களப் பெண் ஒருவர், வீட்டுக்கு அடியுங்கள்… வீட்டுக்கு அடியுங்கள்… அப்போதுதான் உள்ளே இருப்பவர்கள் வெளியில் வருவார்கள் என்று சிங்களத்தில் கத்திக்கொண்டு போனார். பின்னர் நோன்பு திறக்கும்போது, வீடுகளுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. நாங்கள் பயத்தில் வீட்டை பூட்டிவிட்டு பின்கதவால் வெளியேறினோம்.

அப்போது வந்த கடையர்கள் எங்களை நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு எங்களது ஆட்களும் கல்வீசி அவர்களை விரட்டினார்கள். அப்போது வந்த பொலிஸார் வானத்தை நோக்கி சுட்டு, முஸ்லிம்களை விரட்டினார்கள். அப்போது வந்திருந்த காடையர்கள் இலக்குகளை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள். நாங்கள் பின்னாலுள்ள வீடு ஒன்றில் தஞ்சமடைந்திருந்தபோது, எனது வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசினார்கள். வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

ஹைராத் பள்ளிக்கு அருகில் கொஸ்வத்தை பொலிஸ் ஓ.ஐ.சி. இருந்தார். எங்களது வீடு எரிகிறது, தீயணைப்பு படையை வரவழைத்து வீட்டை காப்பாற்றித் தாருங்கள் என்று கேட்டேன். இங்குள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்களும் தும்மோதர பகுதியில் தீயணைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அவை முடிந்த பின்னர்தான் இப்பகுதிக்கு வரும் என்றும் கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். வீடுகளில் தீயை அணைக்காமலிருக்க வந்தவர்கள் நீர்க் குழாய்களை உடைத்திருந்தார்கள்.

எனது ஆண் குழந்தை வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ ஆவணங்களுடன், பிள்ளைகளின் இரண்டு உடுப்புகளை சரி எடுத்து தாருங்கள் என்று கேட்டேன். அங்கிருந்த இராணுவத்தினரிடம், உங்களில் கால்களில் வேண்டுமானாலும் விழுகிறேன் அதை எடுத்து தாருங்கள் என்று கேட்டேன். அப்போது இரண்டு அறைகள் மட்டும்தான் எரிந்துகொண்டிருந்தன. அவர்கள் நினைத்தால் அதை எடுத்து தந்திருக்கலாம். ஆனால், தீயணைப்பு படையினர் வரும்வரை வீட்டுக்குள் யாரும் செல்லமுடியாது என்று பொலிஸார் கைவிரித்து விட்டனர்.

சப்பாத்துகளை ஒட்டிக்கொடுப்பதால் அதன்மூலம் எனக்கு சிறியளவு கமிசன் பணம் கிடைத்துக்கொண்டிருந்தது. எனது தந்தை சந்தையில் வியாபாரம் செய்பவர். தூர இடங்களுக்கு சென்று விற்பனை செய்வதற்காக ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியாக சாமான்களை வாங்கி வைத்திருந்தார். இவை எல்லாமே சாம்பலாகிவிட்டன. காசோலைக்கு பணம் கட்டுவதற்கு 50 ஆயிரம் ரூபா கடன் வாங்கி வைத்திருந்தார். அத்துடன் வைத்திருந்த நகைகளும் காணாமல்போய்விட்டன.

நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்களுக்கென தனியான வீடு இல்லை. ஆனால், காணி இருக்கிறது. அந்த காணிக்குள் இருப்பதற்கு தற்காலிக வீடையாவது அமைத்து தந்தால் மிகவும் பேருதவியாக இருக்கும்” என்று தனது ஒட்டுமொத்த கண்ணீர் கதைகளை எம்மிடம் ஒப்புவித்தார் பாத்திமா அஷ்ரிபா.

அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே மூன்று வயதான அவரது மகள் “எனது உடுப்பு, மோதிரம், காப்பு, தம்பியின் உடுப்பு எல்லாம் போய்விட்டது. எங்கள் வீட்டுக்கு …. மாமா நெருப்பு போட்டார்” என்று மழலை மொழியில் பேசியது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவளது தம்பி “என்னுடைய சைக்கிளும் போய்விட்டது. எனக்கு சைக்கிள் வேணும்…” என்று சொன்னதும் எங்களது கண்கள் கலங்கின.

சோறு போட்ட அப்பக் கடையை உடைத்தனர்

எஹல கொட்டராமுல்லையில் ஏழு பேர்கொண்ட குடும்பம் பாதிக்கப்பட்ட வீடொன்றில் வசித்து வந்தது. வயதான தாய் உம்மு பரீதா, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவரது கணவர், இரண்டு பிள்ளைகளுடன் விவாகரத்துப் பெற்ற தனது மகள் ஆகியோர் திருமணமான இன்னுமொரு மகளின் வீட்டில் வசித்து வந்தனர். மிகவும் வறுமைப்பட்ட இந்தக் குடும்பம், அப்பக் கடை மூலமே தங்களது ஜீவனோபாயத்தை நடாத்திவந்தள்ளது. கடையும் வீடும் சேதமாக்கப்பட்ட சோகத்தில் மூழ்கியிருந்த அந்த கூட்டுக் குடும்பத்தை சந்தித்தோம்.

“எனக்கு 16 வயதாகும்போது நான் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இஸ்லாத்துக்கு வந்தேன். எனக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த மகளின் கணவர், மூன்று பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்றுவிட்டார். கொழும்பில் பல இடங்களில் துப்பரவாக்கும் வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் இந்த வீட்டுப் பொருட்களை வாங்கினேன்.

எனது கணவருக்கு சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் புற்றுநோய் வந்துவிட்டது. அவருக்கு மருந்து கொடுத்துக்கொண்டிருக்கும் போது, நோன்பு திறக்கும் வேளையில் சிங்கள பெண் ஒருவர், நான் முன்னால் போகிறேன். நீங்கள் எல்லோரும் பின்னால் வாருங்கள். பள்ளியிலிருந்து தாக்குவோம் என்று கூறிக்கொண்டே எமது வீடுகளை தாக்கினர். 8 மணிக்குப் பின்னர்தான் பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ஆனால், எவருக்கும் பாதிப்பில்லை.

பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் கடையை உடைத்தனர். வீட்டை எரித்தனர். என்னுடைய வீட்டையும் சேதமாக்கினார்கள். ஆனால், குர்ஆன் இருந்த இடத்துக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. அல்லாஹ் அதனைப் பாதுகாத்தான். இங்கு பத்து பள்ளிகள் இருக்கின்றன. அவைகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் அல்லாஹ் பாதுகாத்து தந்தான்.

எமது உடைமைகள் இல்லாமல் போனாலும் சரி, இந்த அநியாயத்தை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நான் அல்லாஹ்வை நம்பி இருக்கிறேன். நோய்வாய்ப்பட்ட எனது கணவரையும் இங்கு அழைத்து வந்துள்ளேன். இனி ஒருபோதும் சிங்கள ஊருக்கு திரும்பிப்போக மாட்டேன். என்னுடன் சேர்ந்து 21 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அதில் எனது சகோதரியின் மகளும் மகனும் இப்போது நல்ல முறையில் இருக்கின்றனர். 

தாக்குதலை நடத்த வந்தவர்கள் என்னுடைய கடையிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் இந்த அநியாயத்தை செய்தார்கள். அவர்களுக்கு அரசாங்கமோ, அதிகாரிகளோ தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நான் அல்லாஹ்வை மட்டுமே நம்புகிறேன். அவனே அந்த தண்டனையை வழங்க வேண்டும்” என்று உம்மு பரீதா கூறிமுடிக்கும்போது, அவரின் கண்ணிலிருந்து கண்ணீர் பொலபொல என வடிந்துகொண்டிருந்தது.

“ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினர் இருக்கத்தக்க நிலையில்தான் எங்களுக்கு இந்த அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவேண்டும். அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முதல் அரசாங்கம் இவர்களை தண்டிக்கவேண்டும். இதன்மூலம்தான் எதிர்காலத்தில் இப்படியான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கமுடியும்” என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் அவரது விதவை மகள். 

கஞ்சிப் பானைக்குள் சிறுநீர் கழித்தனர்

“கொட்டம்பபிட்டிய மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் 250 ஆயிரம் ரூபா பெறுமதியான கண்ணாடி நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து, 13 இலட்சம் ரூபா செலவுசெய்து நிர்மாணித்த வுழூ செய்யும் தடாகத்தை முற்றாக உடைத்துள்ளனர். அனைத்து ஜன்னல்களையும் பெண்கள் தொழுகையறை, கழிவறைகள் போன்றவற்றையும் முற்றாக சேதப்படுத்தியுள்ளனர். புனித குர்ஆன் பிரதிகளை எரித்து, அதன்மேல் சிறுநீர் கழித்துள்ளார்கள். இப்தாருக்கு தயார்செய்யப்பட்டிருந்த கஞ்சிப் பானையைத் திறந்து அதற்குள்ளும் சிறுநீர் கழித்துச் சென்றுள்ளனர்.

கொட்டம்பபிட்டிய பிரதேசத்தில் 20 கடைகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. 20 வாகனங்கள், 80க்கு மேற்பட்ட வீடுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய அநியாயங்களை செய்தவர்களுக்கு அல்லாஹ் கூலி கொடுத்தே ஆகவேண்டும். அதுவும், புனித ரமழான் காலத்தில் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும்” என்று முஹம்மட் பர்ஹான் தெரிவித்தார்.

சி.சி.ரி.வி. பதிவு இல்லையென்று தாக்கினர்

“ஐ.எஸ். தாக்குதலின் பின்னர், கொட்டம்பபிட்டிய பிரதேசத்திலுள்ள எங்களது மத்ரஸா புலனாய்வுத்துறையினரால் நான்கு தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஐந்தாவது தடவையாக சுமார் ஆயிரம் மாற்றுமத சகோதரர்கள் பொலிஸ் மேலதிகாரியுடன் மத்ரஸாவுக்குள் வந்தனர். இங்கிருந்த மூன்று கிணறுகளில் இருந்த நீரை இறைத்தனர். அதிலிருந்து சந்தேகத்துக்கிடமான எந்தப் பொருட்களும் இருக்கவில்லை.

பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகளை பதிவுசெய்யப்பட்ட நினைவகத்தை பொலிஸார் எடுத்துக்கொண்டு சென்றனர். 23ஆம் திகதி மத்ரஸாவுக்கு விடுமுறை கொடுத்திருந்தோம். பொலிஸார் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் சி.சி.ரி.வி. கமெரா வேலைசெய்துகொண்டிருந்தது. ஆனால், 25ஆம் திகதிக்குப் பின்னர் சி.சி.ரி.வி. பதிவுகள் நிறுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன் பின்னர்தான் அல்ஜமாலியா அரபுக் கல்லூரியும் மஸ்ஜித் சாரா பள்ளிவாசலும் காடையர்களினால் தாக்கப்பட்டது” என்று தெரிவித்தார் மத்ரஸா அதிபர் நிஃமதுல்லாஹ்.

2 comments:

  1. Tears streamed on my cheeks when reading. Can't we get help from foreign authorities to hv justice?

    ReplyDelete
  2. “அநீதிக்கு இலக்கானவர்களுடைய துஆ”, “நோன்பாளியின் துஆ”, ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்காக அவருக்குத் தெரியாமல் கேட்கும் துஆ” ஆகியவை விரைவில் ஒப்புக்கொள்ளப்படும் துஆக்கள்.

    ஆகவே, அந்த அராஜக, இனவாத மற்றும் முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட காடையர்கள் மற்றும் அந்த காடையர்களுக்கு பின்னால் உள்ள தீய சக்திகள் இழிவடைந்து போக நமது துஆக்களை அதிகப்படுத்துவோம்.

    ReplyDelete

Powered by Blogger.