Header Ads



முஸ்லிம்களுக்கு பௌத்த தூபிகளில் ஏறுவது பற்றி, விளக்கங்கள் வழங்க வேண்டும்

முஸ்லிம் மாணவர்கள், இளம் வாலிபர்கள் பௌத்த புராதன முக்கியவம் வாய்ந்த தூபிகளில் ஏறிப்படம் பிடித்தல் தொடர்பாக, ஜும்ஆப் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவேண்டும் என ஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

துரதிருஷ்டவசமாக இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் சமயம் அடுத்த சமயத்தை மதித்து பேணி நடக்கின்ற மார்க்கமாகும். நாங்கள் அடுத்த மக்களின் கலாசாரப் பண்புகளையும் அடையாளங்களை புரிந்துணர்வுடன் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெலம்பொட கதீஜதுல் குப்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஏ. எம். எம். மன்சூர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

இளம் வயதினர் ஏனைய சமய புனித ஸ்தலங்களுக்குச் சென்று அதில் ஏறிப் படம் எடுப்பது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். சில கைது செய்யப்பட்டு விடுதலையாகி இருக்கின்றார்கள் இது திட்டமிடப்பட்ட செயல் அல்ல.

எமது நாட்டைப் பொறுத்தவரையில்நாங்கள் சிறுபான்மையினமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே நாங்கள் பெரும்பான்மையின மக்களை மதித்து வாழக் கூடிய நிலையில் இருக்கின்றோம். மிக முக்கியமாக நாங்கள் புரிந்துணர்வுடன் நடத்தல் வேண்டும். எமது சிறார்களுக்கு பள்ளிவாசல் பாடசாலை மூலமாக அறிவுறுத்தல் விடுக்கப்பட வேண்டும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகப் பின்புலத்துடன் தனித்துவமான ஆளுமையுடன் கொண்ட பெண்களை உருவாக்கி வழங்கும் ஒரு இலட்சியத்தின் வெளிப்பாடாக வெலம்பொட கதீஜதல் குப்ரா பெண்கள் கல்லூரி விளங்குகின்றது. சீரான பெண்கள் மூலம் சீரான சமூகம் என்ற எண்ணக் கருவை உருவாக்கக் கூடியதாக அரபு மகளிர் கல்லூரிகள் திகழுகின்றன. பேருவளை நளீமிய்யா போன்று இந்த கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியையும் நான் காணுகின்றேன்.

கற்றதன் பின்னர் தான் பெற்ற கல்வியின் மூலம் தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பிரயோசமுள்ளவராக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்தக் கல்வியில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எதிர்காலத்தில் எமது சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் இந்த ஆலிமாமார்கள் தான் உள்ளனர். இன்று எமது நாட்டில் 450 க்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் இருந்த போதிலும் ஒரு சில அரபுக் கல்லூரிகளே பிரகாசிக்கின்றன. சில அரபுக் கல்லூரிகளுக்கு ஒழுங்கான பாடத் திட்டம் இல்லை. பல தரப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஒரு பொதுவான பாடத் திட்டத்தினை அமுல் படுத்தி ஒரு பொதுப் பரீட்சையொன்றை நடத்தி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

2 comments:

  1. இப்போது தூபிகளின் மீது ஏறி அவமதித்ததாக கூறி கைது செய்கிறார்கள், நாளை பௌத்த அடையாளங்களை தொட்டதாக கைது செய்வார்கள், பின்னர் கண்ணால் பார்த்து அவமதித்ததாக கூறி கைது செய்வார்கள், நீங்களெல்லாம் அதற்கெல்லாம் ஜால்றா போடுவீர்கள்.

    சரி இருக்கட்டும். எமது பள்ளிவாயல்கள் கொளுத்தப்பட்டனவே, உடைக்கப்பட்டனவே இவைகளுக்கு ஏன் சட்டம் பாயவில்லை? இவை குற்றமில்லையோ? நீங்கள்தானே அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுக்கிறீர்கள். கேட்க மாட்டீர்களோ?

    ReplyDelete
  2. You need to teach a comparative religious studies in all schools from grade one to university level

    ReplyDelete

Powered by Blogger.