இறைவனின் உதவியால் பேரம் பேசும், கட்சியாக மாறியிருக்கிறோம் - ரிஷாட்
அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும், தொடரச் செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்பு விழாவின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாள்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான போராட்ட நாள்களாகவுமே இருந்தன எனச் சுட்டிக்காட்டினார்.
இந்தப் போராட்டத்திலே, வன்னி மாவட்டத்தில் பிரசவித்த தமது கட்சி, களத்தில் நின்று ஜனநாயகத்தை உயிரூட்டுவதற்கும் அரசமைப்பில் விழுந்த ஓட்டையை ஒட்டுவதற்கும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டதாகவும் தங்களுக்கு அரசியல் அதிகாரம் தந்த வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்குமே இந்த பெருமையும் கெளரவமும் கிடைக்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வன்னி மாவட்டத்திலே ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி, இறைவனின் உதவியால் இன்று வியாபித்து ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் நமது தேவைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாகவும் இன்று மாறியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment