சுதேச மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை, நோயாளிகளுக்கு வழங்குவது சம்பந்தமான தீர்ப்பு
இலங்கையில் யூனானி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவது குற்றம் என்றும் அதற்கு அவர்களுக்கு உரிய தகமைகள் இல்லை என்றும் ஏற்கனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பினை வழங்கியுள்ளது. யூனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் படி அவர்களுக்கு இதற்குரிய தகைமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சம்பந்தமாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் சாராம்சம் வருமாறு,
“ பல ஆயுர்வேத மருத்துவர்கள் தாங்கள் தமது பட்டப்படிப்பின்போது ஆங்கில மருந்துகள் சம்பந்தமாக விரிவுரைகளை கொண்டிருப்பதால் தமக்கு ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கும் உரிமை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த கோரிக்கையை நீதிமன்றம் முற்றாக நிராகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள சட்டரீதியற்ற வைத்தியர்களில் அதிகமானவர்கள் இந்த ஆயுர்வேத வைத்தியர்களே. இவர்கள் நோயாளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளது.”
எனவே பொதுமக்களும் தாங்கள் இவ்வாறான யூனானி, ஆயுர்வேத உத்தியோகத்தர்கள் தங்களுக்கும் ஆங்கில மருந்துகளை வழங்க முடியும் எனக்கூறி சட்டவிரோதமாக இயங்குவதை கண்டால் தமது அருகிலுள்ள MOH காரியாலயம், போலீஸ் நிலையம் ஆகியவற்றில் அறிவிக்க முடியும். அத்துடன் இவர்கள் சம்பந்தமாக பொதுமக்கள் ஆதாரபூர்வமாக நடவடிக்கை எடுக்க விரும்பினால் இவர்களிடம் ஆங்கில மருந்துக்கான பற்றுச்சீட்டையும் அவர்களது உத்தியோக முத்திரையையும் அவர்கள் மருந்து வழங்கும்போது பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அவர்கள் ஆங்கில மருந்துகளை வழங்கும்போது ஒலி/ஒளி பதிவு செய்து உரிய அதிகாரிகளிடம் வழங்கவும் முடியும்.

Post a Comment