Header Ads



மைத்திரிக்கு நன்றி, கூறுகிறார் ரஞ்சன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளினால் கட்சிக்குள் இருந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு, உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கான வழியினை ஏற்படுத்தியிருக்கிறார் என அக்கட்சியின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் ராமநாயக்க,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளினால், ஐக்கிய தேசிய கட்சிக்கு தனித்து அரசாங்கமொன்றை அமைத்து ஆட்சி செய்யக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

ஜனாதிபதியால் கூறப்படும் எந்த விடயத்தை நாம் நம்புவது என அவரிடமே கேட்க விரும்புகின்றேன். காரணம் அண்மைக்காலமாக அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கேட்டால், அவற்றை நான் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக கூறினேன் எனக் கூறுவார்.

எதுவாயினும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்பட்ட கருத்து முரண்பாடுகள் மற்றும் ஏனைய பல்வேறு சிக்கல்களை தீர்த்து தற்போது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவியுள்ளார் இதற்கு அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.