மகிந்த தரப்பு பழிவாங்குகிறது - சு.க. அழிந்துவிடுமென எச்சரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை பழிவாங்கி வருவதாகவும் ராஜபக்சவினருடன் கூட்டணி அமைத்தால், சுதந்திரக் கட்சி முற்றாக அழிந்து போகும் எனவும் அந்த கட்சியின் தலைவர்கள் சிலர் நேற்று ஜனாதிபதியை சந்தித்து கூறியுள்ளனர்.
மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண ஆகியோர் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு அழுத்தங்களை கொடுத்து தமது கட்சியில் இணைத்து வருகின்றனர்.
சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்களையும் பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத்துடன் இணைக்கும் வகையில் காமினி லொக்குகே அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எந்த வகையிலும் அவசர பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக தெளிவான பதில் எதனையும் வழங்காத ஜனாதிபதி, தான் தலைவராக இருக்கும் வரை சுதந்திரக்கட்சியினரை அநாதரவாக கைவிடப்போவதில்லை எனக்கூறியுள்ளார்.
Post a Comment