Header Ads



இந்த அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் - மகிந்த சார்பு அமைச்சர்கள் கோரிக்கை

முதலாவதாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதுடன் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக சபாநாயகர் செயற்படவேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிறேமஜயந்த, எஸ்.பி திசாநாயக்க ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டனர். 

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். 

இங்கு அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், நிலையியற் கட்டளை வேலைத்திட்டம் உண்டு. இந்த விடயத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அரசாங்கமொன்றின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்ததாகும். இதனை ஏற்றுக்கொள்வது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் முதலாவதாக சபாநாயகர் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். 

அரசியல் யாப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுத்து சரியான முறையில் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை என்பது வேறொருவிடயமாகும். 

பாராளுமன்ற பொறுப்பு குறித்து சிந்திக்க வேண்டும். நீதிமன்றம் சில பரிந்துரை தொடர்பில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பாராளுமன்ற செயலாளர் நாயகம், அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டு சபாநாயகர் செயற்படவேண்டும். 

இது வரலாற்றிலிருந்து இன்று வரை இருந்துவரும் நடைமுறையாகும். அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள். 

பாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட பாராளுமன்ற செயற்குழுவொன்று அமைக்கப்படுவது அவசியம் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டுமே உள்ளது. இது அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இதற்கு மேலதிகமாக எவருக்காவது தேவை இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் அத்தகைய பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமையவே இடம்பெறவேண்டும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.