எமது நாட்டு விவகாரத்தை, நாம் தீர்த்துக் கொள்கின்றோம் - வெளிநாட்டு தலையீடு வேண்டாம்
எமது நாட்டு விவகாரத்தை நாம் தீர்த்துக் கொள்கின்றோம். உள்விவகாரத்தில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாமென இலங்கையின் முன்னாள் இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இராஜதந்திர சேவைக்காக ஒரு நாட்டுக்குச் செல்லும் தூதுவர் அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமில்லை. எனினும், கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் சட்டத்தை மீறும் வகையில் நடந்துகொள்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிநாடுகளில் இராஜதந்திரிகளாகப் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
சர்வதேச உறவுகளுக்கான சங்கத்தின் சார்பில் முன்னாள் இராஜதந்திரி சரத் விஜயதாச, சிரேஷ்ட சட்டத்தரணியும், ஐ.நாவின் முன்னாள் சட்ட ஆலோசகருமான லக்சிறி மென்டின்ஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ஷரூக், சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க வித்தாரன, திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் தலைவர் பேராசிரியர் ராஜா குணரட்ன ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
"எம்மைத் தனியாக விட்டுவிடுங்கள். எமது பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்கின்றோம்" என அவர்கள் சர்வதேச சமூகத்திடம் கூட்டாக கோரிக்கைவிடுத்தனர். இறைமையுள்ள நாடான இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எந்தவொரு சட்டத்திலும் இடமில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தையும், இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பான வியன்னா சமவாயத்தையும் மீறும் வகையில் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் செயற்பட்டு வருவதாக, திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் தலைவர் பேராசிரியர் ராஜா குணரட்ன குற்றஞ்சாட்டினார்.
நான்கு தசாப்தத்துக்கு மேலாக ஐ.நாவில் உறுப்புரிமையைக் கொண்டிருக்கும் இலங்கை இறைமையுள்ள நாடாகும். இவ்வாறு இறைமையுள்ள நாட்டின் உள்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தேவையற்ற விதத்தில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச சட்டத்திலோ அல்லது வேறெந்த சட்டத்திலோ இதற்கு இடமில்லை.
இராஜதந்திர சேவைக்காக ஒரு நாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் அந்நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடமுடியாது. அவ்வாறு தலையிடும் தூதுவர்களை அந்நாட்டிலிருந்து அகற்றுவதற்கான அதிகாரம் அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு உள்ளது. 1991ஆம் ஆண்டு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்தவரை அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியேற்றி இருந்தார். அக்காலத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பில் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவிருந்தவர் பொலிஸில் முறைப்பாடு செய்தமை தொடர்பிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இலங்கை மாத்திரமன்றி ஏனைய உலக நாடுகளிலும் இவ்வாறு, ராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் காணப்படுவதாகவும் பேராசிரியர் ராஜா குணரட்ன சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, நாட்டின் உயர்ந்த சட்டமாக மதிக்கப்படும் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய சிரேஷ்ட சட்டத்தரணியும், முன்னாள் இராஜதந்திரியுமான லக்சிறி மென்டிஸ், பல்வேறு குழப்பங்களைக் கொண்டிருக்கும் 19ஆவது திருத்தச்சட்டம் மீளப்பெறப்பட்டு புதிதாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது விடயத்தில் உச்சநீதிமன்றம் உரிய கவனம் செலுத்து மென்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இது இவ்விதமிருக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய நிறைவேற்றப் படவில்லை என்பதால் அது ஏற்புடையது அல்ல என சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க வித்தாரன தெரிவித்தார். நிலையியற் கட்டளை இடைநிறுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிலையியற் கட்டளையில் இடமுள்ள போதும், சுமந்திரன் எம்பி உரிய முறையில் அது குறித்த பிரேரணையை முன்வைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பதாக அறிவித்த சபாநாயகர், குழப்பத்தைக் காரணங்காட்டி ஒலியைக் கொண்டு வாக்கெடுப்பை நடத்தியிருப்பது ஏற்புடையது அல்ல என்பதுடன், எத்தனை வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது என்பதையும் அறிவிக்கத் தவறியுள்ளார். பல சந்தர்ப்பங்களில் நிலையியற் கட்டளை பின்பற்றப்படவில்லை என்பதால் தற்போதைய அரசாங்கம் இன்னமும் செயற்படுகிறது என்றார்.

Oh really...... Bells are dancing... for...!!!
ReplyDelete