முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டுவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை
கண்டி, திகனை, தெல்தெனிய பிரதேசங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரி, மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று தாம் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் - ஜம்புரேவல சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் வெளியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கண்டி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஒரு பிக்கு உட்பட 93 சிங்கள இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, பல்லேகலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால், இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கை தொடர்ந்தும், அவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிணை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காக நடவடிக்கைகளை நீடிக்காது, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை நிரூபிக்க சாட்சியங்கள் இருந்தால், அவற்றை முன்வைத்து வழக்கு தொடர வேண்டும் எனவும் ஜம்புரேவல சந்தரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கண்டி, திகனை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவியும் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
Post a Comment