பிறை விடயத்தை, நிதானமாக அணுகுவோம்
இந்த ஆண்டுக்கான ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பில் சர்ச்சைகள் தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது. ரமழான் 28 இல் பிறை தென்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகளை முன்னிறுத்தியும் இம்முறை இலங்கையில் தாமதித்தே ரமழான் ஆரம்பமானதாக முன்வைக்கப்படும் கருத்துக்களைத் தொடர்ந்துமே இந்த சர்ச்சை தோன்றியுள்ளது.
இந் நிலையில் இவ்வாறானதொரு சிக்கலான சூழ்நிலையில் நாம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வா ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய '' உலகின் ஒரு பகுதியில் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டு அல்லது ஷஃபான் மாதத்தை முப்பதாகப் பூர்த்திசெய்து ரமழான் மாதத்தின் நோன்பை ஆரம்பித்ததன் பின்னர் இருபத்தெட்டாவது நாளில் தலைப் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இருந்து உறுதியான சாட்சிகள் மூலம் பிறை தென்பட்ட விடயம் நிரூபிக்கப்பட்டால் இருபத்தொன்பதாவது நாளில் பெருநாள் கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பை கழா செய்வதும் அவசியமாகும்'' என உலமா சபையின் பத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நாட்டின் எந்தப் பகுதியிலாவது புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் இலங்கையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்றும் இவ்வாறு புனித ரமழான் மாதத்தினை 28 நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் இந்த கழா நோன்பினை எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை (புனித ஷவ்வால் மாதத்தின் பிறை 2ஆம் நாள்) பிடிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
இந்த பத்வா ஒருபுறமிருக்க, இலங்கையில் பிறை தொடர்பான தீர்மானங்களை வெளியிடுவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசலும் இது விடயத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கமைய பிறை 29 இல் அதாவது எதிர்வரும் 15 ஆம் திகதியே பிறை பார்க்கப்பட வேண்டும் என பிறைக் குழுத் தலைவர் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் பஹ்ஜி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலமா சபையும் கூட பிறை பார்ப்பதற்கான நாள் 15 ஆம் திகதி என்றே தெரிவித்துள்ளது.
எனினும் ரமழான் 28 இலும் பிறை தென்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அன்றைய தினம் எவரேனும் பிறை கண்டமை குறித்து ஆதாரபூர்வமாக தெரியப்படுத்தினால் அது தொடர்பில் பிறைக் குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்றும் உலமா சபை மற்றும் பெரிய பள்ளிவாசல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இப் பின்னணியில்தான் இம்முறை பிறை 28 இல் பெருநாளா அல்லது பிறை 29 இல் பெருநாளா அல்லது பிறை 30 இல்தான் பெருநாளா என்ற பெரும் குழப்பத்தில் இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர். எது எப்படியிருப்பினும் வியாழக்கிழமை மாலை அனைவரும் பிறையைத் தேடப் போகிறார்கள் என்பது மாத்திரம் இப்போதைக்கு உண்மை. அவ்வாறு பிறை தென்பட்ட தகவல்கள் நாட்டின் ஏதாவதொரு பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்றால் அதனை பிறைக்குழு எவ்வாறு கையாளப் போகிறது என்பதே இங்குள்ள சவாலாகும்.
கடந்த 2013 இல் கிண்ணியாவில் இதேபோன்றுதான் பிறை கண்டமை அப் பகுதி ஜம்இய்யதுல் உலமா கிளையினால் உறுதி செய்யப்பட்டும் கூட அதனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவோ பிறைக்குழுவோ ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலை தோன்றியதை நாம் அறிவோம். அவ்வாறானதொரு கசப்பான அனுபவம் இம்முறை ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்கு பிறையைத் தீர்மானிக்கும் சட்ட, சமூக அங்கீகாரம் கொண்ட தலைமைகள் இடமளிக்கவும் கூடாது.
இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட மார்க்க தலைமைகள் தமது கடமையை சரிவரச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
-Vidivelli
அதாவது வியாழன் மாலை பிறை கண்டதாக யாராவது அறிவித்தால் அதை சட்ட அங்கீகாரம் கொண்ட தலைமைகள் ஏற்றுக் கொல்லக் கூடாதென்று இபபொழுதே சொல்லி வைக்கிரீர்கள்!
ReplyDelete