Header Ads



ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றது - ஈரானிய தூதுவர்


ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு என இலங்கைக்கான ஈரானிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி தெரிவித்தார்.

ஈரானிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி, தனது முதலாவது ஆலோசகரும், தூதுக்குழுவின் துணைத் தலைவருமான அஹ்மடி  உள்ளிட்ட ஈரானிய பிரதிநிதிகளுடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடான சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஈரானிய தூதுவர்,

“ஈரானிய நாட்டுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதிநிதிகளின் விஜயத்தின் முடிவுகள் வெற்றிகரமாக இருந்தன. அத்துடன் இந்த விஜயத்தின் மீதான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாரிய பங்களிப்புக்கு எனது பாராட்டுக்கள். தெஹரானுக்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் இலங்கைக்கு பெரும் நன்மைகள் கிடைத்திருக்கின்றன. இந்த விஜயத்தின் போது எமது நாட்டு    ஜனாதிபதி ஹசன் ரூஹானி பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுக்கான இருதரப்பு  சந்திப்புத் தொடருக்கு வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன் இதற்கான புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை ஏற்படுத்தல் அவசியம்.  தற்போது 12 வது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வினை ஆகஸ்டில் தெஹரானில்  நடத்துவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம். எங்கள் வர்த்தக எண்களை அதிகரிக்க இந்த பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு ஒரு உந்துசக்கியாக இருக்கின்றது” என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கைக்கும், ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது.  எமது ஈரானிய விஜயத்தின் போது ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ருஹானி, அந்நாட்டு அரசாங்கம் மற்றும் ஈரானின் மக்கள் இலங்கை பிரதிநிதிகளுக்கு வழங்கிய  விருந்தோம்பலுக்காக நாங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம். 

இலங்கைக்கு, ஈரானினால் வழங்கப்பட்ட பல இருதரப்பு சலுகைகளுக்கு எனது பாராட்டுக்கள். பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வின்  தொடர், பல வழிகளில் எமது உறவுகளை முன்னேற்றுவதில் உதவியாக உள்ளது. எமது இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், சுகாதாரம், தர நிர்ணயம், ஒளிப்படத் தொழிற்துறை, மாணவர்களின் பரிமாற்றங்கள், தொலைக்காட்சி. கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய துறைகள் தொடர்பாக  காணப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு தொடர் எங்களுக்கு உதவுகிறது. 11 ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வுத் தொடர் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, கடந்த வருடம் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 186 மில்லியனைக் கொண்டது. இதனை 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 180 மில்லியன் டொலர் மதிப்பில் 4.5% சதவீதமாக  அதிகரித்து காணப்பட்டது. வர்த்தக சமநிலை இலங்கைக்கு சாதகமாக இருந்த நிலையில் 94% சதவீத மொத்த வர்த்தகத்தில் 177 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இலங்கையில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ் ஏற்றுமதிகளில் இலங்கை தேயிலை (90%), உறைந்த தேங்காய் (3%), பிற காய்கறி  கலவைகள் (2%) மற்றும் கொழுப்பு நீக்கிய தேங்காய் (1%) ஆகியவை பிரதான ஏற்றுமதிகளாக ஈரானுக்கு 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன. ஈரானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த இறக்குமதிகள் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன. இதில் முன்னணி வகிக்கும் நான்கு இறக்குமதிகளாக  மீன், கம்பிகள் மற்றும் கேபிள்கள், திராட்சை, பிளாஸ்டிக் ஆகிய பொருட்கள் காணப்பட்டன. மேலும், ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்து வருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.

No comments

Powered by Blogger.