பரபரப்பான சூழலில், கூடவுள்ள பாராளுமன்றம்
பிரதமர் பதவி நீக்கம், தனியாட்சி போன்ற அரசியல் பரபரப்பான சூழலில் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுகின்றது.
இதன்போது பிரதான அரசியல் கட்சிகள் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சில வேளைகளில் கட்சி தாவல்கள் இடம்பெறக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாக சர்ச்சையான நிலைமை நாளை பாராளுமன்றத்தில் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதம் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்த பின்னர் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இருபிரதான கட்சிகளும் பிளவடைந்துள்ளன. இதனால் கடந்த வாரம் முழுவதும் அரசியல் ரீதியாக நாடு பரப்பரப்பாக இயங்கியமை காண முடிந்தது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் தனி ஆட்சி அமைப்பதாகக் கூறி விட்டு பின்னர் தேசிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்தது. அதனையடுத்து தற்போது கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தனித்து ஆட்சி அமைக்கவுள்ளதாக கூறி வருகின்றது.
அத்துடன் பிரதமர் பதவியிலும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினரே பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தம் பிரயோகித்த போதிலும் தற்போது நான் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரியவும் பிரதமர் பதவி பொறுப்பினை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் ரீதியாக பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ள தருவாயில் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் கூடும் முதலாவது பாராளுமன்ற அமர்வாக இதனை கருத முடியும்.
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
ReplyDelete(அல்குர்ஆன் : 3:26)