Header Ads



மஹிந்தவின் வெற்றியும், முஸ்லிம்களது பதற்றமும்..!!

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. முஸ்லிம்களது மனதில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. குடும்பத்தில் மரணம் ஒன்று நிகழ்ந்துவிட்டதைப் போல பரஸ்பரம் ஆறுதல் தெரிவித்துக்கொள்கின்றார்கள். உண்மையாகவே நாம் பயப்பட வேண்டுமா, அல்லது எந்தளவு பயப்பட வேண்டும் என்பதை சரியாகப் புரிந்துகொள்ள கடந்த தேர்தல் முடிவுகளுடன் இந்தத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடுவதே பொருத்தமானது. இதற்காக, கடைசியாக நடந் நாடளாவிய தேர்தல்களைப் பயன்படுத்துவோம்.

2015 பொதுத்தேர்தல் முடிவை பயன்படுத்த முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் நேரடியான முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள கட்சி ஒன்று அந்தத் தேர்தலில் பங்குபற்றவில்லை. 2015 ஜனாதிபதித் தேர்தல், 2010 பொதுத்தேர்தல் என்பவற்றின் முடிவுகள் இவ் ஒப்பீட்டுக்கு பொருத்தமாக இருக்கும். 2015 ஜனாதிபதித் தேர்தல், மஹிந்த தோல்வி அடைந்த தேர்தல். 2010 பொதுத்தேர்தல், மஹிந்த அதி உச்சத்தில் இருந்நத தேர்தல். இம்முறை உள்ளூராட்சித் தேர்தலும், ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் போன்ற போட்டியுடன் நிகழ்ந்ததால் இந்த ஒப்பீடு பொருத்தமானதாகவே தோன்றுகின்றது.


2018 உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்தவின் வாக்கு எண்ணிக்கையில் பெரரும் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

2018 தேர்தலின் சரிவை மறைத்து தமது ஆதரவாளர்களின் உள்ளத்தில் வெற்றி மனப்பான்மையை ஏற்படுத்துவதில் மஹிந்த வெற்றி பெற்றிருக்கிறார் என்பது உண்மை. மஹிந்த எதிர்ப்பு வாக்குகள் பல தரப்புகளாக சிதறி இருக்கின்றமையும், ஐ.தே.க. + சு.க. இன் பின்னடைவுமே இதற்கான உண்மையான காரணங்கள். ஐ.தே.க. தன் இரண்டு வருட ஆட்சியில் நல்லாட்சிக்கான மக்களின் கனவை சிதைத்தமைக்கான கூலியைப் பெற்றுக்கொண்டுள்ளது. 2010 பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது, “என்ன நடந்தாலும் என் வாக்கு ஐ.தே.க. இற்குத்தான்” என்று சொல்கின்ற அதி பாரம்பரிய வாக்குகளை மட்டும்தான் கட்சி தென் இலங்கையில் பெற்றுள்ளது. நல்லாட்சி கனவு சிதைந்தமை சு.க. வையும் பாதித்தது. இது வரையான வரலாற்றில் சு.க. பெற்ற மிகப் பெரும் தோல்வி இதுதான். 1977 பொதுத் தேர்தலில்கூட சு.க. 29.72% வாக்குகளைப் பெற்றிருந்தது. உண்மையான சு.க. எது என்ற குழப்பம், கட்சியின் செயற்படு உறுப்பினர்கள் மஹிந்த வசம் இருந்தமை, தொகுதி வேற்பாளர்களாகப் நிறுத்துவதற்கு மக்களை கவரும் ஆளுமை உள்ள வேட்பாளர்கள் கிடைக்காமை போன்ற காரணிகளும் இதன் பின்னணியில் நின்று செயற்பட்டன. சு.க. வெற்றி பெற்ற தொகுதிகளை அவதானிக்கும்போது இந்த வாதம் தெளிவாகப் புரியும். இவ்வளவு பிரச்சினைகள் குழப்பங்கள் இருந்த சூழலில்கூட மஹிந்த தரப்பு தமது வாக்குகளை அதிகரித்துக்கொள்வது எப்படிப்போனாலும், வாக்குகளில் ஏற்படும் சரிவை தடுத்து நிறுத்த முடியவில்லை

வட்டார முறைத் தேர்தலில், முன் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது மிக முக்கியமானது. “இந்தத் தேர்தல் தேசிய அரசியலுக்கானது அல்ல. எனவே கட்சியைப் பார்க்க வேண்டாம், வேட்பாளர்களைப் பாருங்கள்” என்ற பிரச்சாரத்தினூடாகவும் மஹிந்த தரப்பு கணிசமான வாக்குகளை ஈர்த்துக்கொண்டது. பொதுத் தேர்தலிலோ, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிலோ இந்த வாக்குகள் எதுவும் மஹிந்த தரப்பை சென்றடையப் போவதில்லை. இந்த நிமிடமே இன்னொரு உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு இதே வேட்பாளர்கள் மீண்டும் முன்னிறுத்தப்பட்டால்கூட மஹிந்த தரப்பு மீண்டும் இதேயளவு வாக்குகளைப் பெறப் போவதில்லை.

இந்தத் தேர்தல் முடிவு சொல்லும் செய்திகளில் பயப்படவேண்டிய செய்தி எது?

முஸ்லிம் வாக்குகள் அரசியல் வியாபாரிகளுக்கிடையிலும் பிரதேசவாத பிழைப்புவாதிகளுக்கிடையிலும் சிதரடிக்கப்பட்டிருக்கின்றது.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் அரசியலில் மஹிந்நதவின் எழுச்சி

தமிழ் வாக்காளர்கள் மீண்டும் இனவாத அரசியலின் பக்கம் நகர்ந்துகொண்டிருக்கிரார்கள்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் தேர்தல் முடிவுகளை அவதானித்தால், தனி மனிதர்களின் தாக்கம் தெளிவாகவே தெரிகின்றது. “சிந்தனைகள் அவசியம் இல்லை. இன்ன மனிதன் காட்டும் யாருக்கும் எனது வாக்கைக் கொடுக்க நான் தயார்.” என்ற மஹிந்தவாத சிந்தனை முசலி, காத்தான்குடி, அக்கரைப்பற்று தேர்தல் முடிவுகளில் தூக்கலாகவே தெரிகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் விட்ட தவறுகளின் இடைவெளிகளை தனி மனிதர்கள் பிடித்துக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை. உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் என்பது  சிந்தனாவாத கட்சியாக இருக்கவில்லை. அது தனி மனிதர்களின் கட்சி. அதன் யாப்பும் அப்படியே எழுதப்பட்டுள்ளது. அதன் கவர்ச்சிமிகு தலைவர் மரணித்த பின் குட்டிக்குட்டி தனிமனிதர்களின் பின்னால் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள். ஒரு குட்டித் தலைவன், கட்சியில் “தனக்கான இடம்” சரியாக வழங்கப்படவில்லை என்று கருதினால், தமக்கான அணியுடன் வெளியேறுவார் என்பதே வரலாறு. அப்படி வெளியேறியவர் தமது உள்ளூராட்சி சபை எல்லைகளுக்குள் பிரதேசவாத உணர்வைக் கூர்மைப்படுத்தி தமது காரியங்களை சாதித்துக்கொள்வார். அந்தளவு பலம் இல்லாதவர்கள், முன்னர் வெளியேறிய வேறு ஒருவர் தமது தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டுள்ள கட்சி ஒன்றுடன் தற்காலிகமாக இணைந்துகொள்வார். இந் அரசியலை நுட்பமாக உள்வாங்கிக்கொண்டுள்ள ரிஷாட் பதிய்யுத்தீன் தமது கால்களை அகலப்பதிப்பதற்காக இதனைப் பயன்படுத்தி வருகின்றார். அவர் வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிட்டு ஆசனங்களை வென்றெடுத்துள்ளார். இனத்துவ அரசியலில் இருந்து இவ்வளவு காலமும் தம்மை தூரப்படுத்திக்கொண்டிருந்த மக்களை வலிந்து இனத்துவ அரசியலில் தள்ளிவிட எடுத்த முயற்சியில் ரிஷாட் பதிய்யுத்தீன் வெற்றி பெற்றிருக்கிறார்.

களுத்துறை மாவட்ட தேர்தல் முடிவுகள், அதிலும் குறிப்பாக பேருவவை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சுயேச்சை என்ற பெயரில் இயங்கிய மஹிந்த தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள், வேறு சில அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி முகமூடிகளின் பின்னால் நின்று வெற்றியை களவெடுத்திருக்கின்றார்கள். சுயேச்சைக் குழுவின் வெற்றியை மஹிந்த தரப்பு கொண்டாடும்வரை சுயேச்சைக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று பகிரங்கமாக செய்யப்பட்ட சத்தியத்தை மக்கள் நம்பினார்கள். அரசியலுக்காக அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடக்க முடியும் என்பது இன்னொருமுறை வெளிப்பட்டிருக்கின்றது என்பதற்கு அப்பால், தனி மனித அரசியலில் இருந்து கொள்கை அரசியலுக்கு முஸ்லிம்கள் நகர வேண்டும் என்று பாடம் ஒன்று கற்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஒன்றுபட்ட இலங்கையையும் முஸ்லிம்களுடனான ஒற்றுமையையும் விரும்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தன் வாக்குகளில் சரிவை எதிர்கொண்டிருக்கின்றது. அதற்கு எதிர் நிலையில் உள்ள சக்திகள் தமது வாக்கு வங்கிகளைப் பலப்படுத்திக்கொண்டுள்ளன. நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் போதுமாக எடுக்கப்படாத நிலையில் இவ்வாறான தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்படவேண்டியதே. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சிகள் வேகமாக்கப்படவேண்டியதன் தேவையை இது உணர்த்துகின்றது.

– ழமீர் -

4 comments:

  1. Use full and researchable article well-done sir think more How to chang our innocent community. Specially I welcome to Joint NFGG

    ReplyDelete
  2. Our Success
    Our security
    Our Defend only
    Follow the islam and Sunnah.
    Not a group work.
    Entire society to be Gather in hand.example Arab countries .

    ReplyDelete
  3. ‘ஜெப்னா முஸ்லிம்ஸ்’ ஏன் இப்படி மிரளுகின்றது? மீண்டும் இனச் சாயம் பூச முயல வேண்டாம். முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுந்தானா வாக்களிக்க வேண்டும்? அது எமது மார்க்கத்தின் ஓர் அங்கமா? வீணாக பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம். அதுவும் நன்றாகக் காட்டிக் கொடுக்கின்றீர்கள், களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை! கேவலமாக நடந்து கொள்ள வேண்டாம். ஏற்கெனவே, முஸ்லிம் கௌன்சில் பிரச்சினையை வளர்த்துவிட்டது. போதும், உங்கள் நாடக அரங்கேற்றத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்! உருப்படியாக எதையாவது எழுதப் பாருங்கள்!
    லின்னாஸ் – மக்கொனை.

    ReplyDelete

Powered by Blogger.