சட்டவிரோதமான முறையில் ரோஹிங்யர்கள் எவரும், நாட்டில் தங்க வைக்கப்படவில்லை - ஷிராஸ் நூர்தீன்
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி காலை காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து 30 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் யாழ் பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு கடந்த மே மாதம் 02ம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கமைய இவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் தங்க வைத்ததாக, மியன்மார் அகதிகளுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
இவர்கள் குறித்த பிரதேசத்தில் தங்கியிருப்பது தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு கல்கிஸ்ஸ பொலிஸார் பதில் கடிதம் அனுப்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.
அதேவேளை குறித்த அகதிகள் குழு அண்மையில் இலங்கைக்கு வந்தவர்கள் அல்ல என்றும், இலங்கையில் இவர்கள் தவிர மியன்மார் அகதிகள் வேறு எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சட்டவிரோதமான முறையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் எவரும் நாட்டில் தங்க வைக்கப்படவில்லை என்றும், சிலர் அரசியல் நோக்கத்திற்காக பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
Post a Comment