முசலி முஸ்லிம்களின் உரிமைப் போராட்டம் தொடர்கிறது, மைதானத்தில் ஜும்ஆ தொழுகைக்கும் ஏற்பாடு
-SNM.Suhail - விடிவெள்ளி)
தமது பூர்வீக இடங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தியமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து முசலி மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப்போராட்டம் நேற்று இரண்டாம் நாளாகவும் தொடர்ந்தது.
இன்றும் மூன்றாம் நாளாக அப்போராட்டத்தை நடத்த விருக்கும் முசலி மக்கள், நாளை வெள்ளிக்கிழமை பாரியதொரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் பொருட்டு நாளை ஜும்ஆ தொழுகையை மைதானத்தில் நடத்துவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மக்கள் போராட்டத்திற்கு பிரதேசத்தில் உள்ள விஷ்ணு எனும் தமிழ் அமைப்பு நேற்றைய தினம் ஆதரவு வழங்கி அதில் கலந்துகொண்டதுடன் அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ பாரிமார்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கினர்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மன்னார் முசலி பிரதேசத்திலுள்ள அதிகமான பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மறிச்சிகட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் பிரதேசத்திலுள்ள கிராமிய அபிவிருத்தி சங்கங்கள், மீனவர் சங்கங்களும் கலந்துகொண்டன.
இந்நிலையில் நேற்றைய தினம் மேற்குறிப்பிட்ட மூன்று கிராம மக்களுடன் ஹுனைஸ் நகர், கொண்டச்சி, அகத்திமுறிப்பு, பொற்கேணி, வேப்பங்குளம் ஆகிய கிராம மக்களும் இணைந்துகொண்டனர்.
அத்துடன் முசலி பிரதேச அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகளும் நேற்றைய இரண்டாம் நாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில்,
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஓரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் நேற்றுக்கூட ஜனாதிபதிக்கு எங்கள் கோரிக்கையினை முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்புக்கள் ஊடாக அனுப்பி இருக்கின்றோம்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்களுக்கு அநியாயம் இடம்பெற்றதாகத் தெரிவித்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு நல்லதை செய்யாமல் எங்கள் உறவுகள் பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலைகளை செய்துள்ளது.
எங்கள் போராட்டத்திற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.
இதற்கு ஜனாதிபதி நீதியான தீர்வொன்றினை வழங்கும்வரை போராட்டம் தொடருமென சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அரசுதான் மாறினாலும் இனவாத பூதம் பாதிக்கப்பட்ட மன்னார் முஸ்லிம்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.
ReplyDeleteஇவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை ஆகையால் ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சில நிமிடம் செலவிடுங்கள். அல்லாஹ் உங்களின் துன்பங்களையும் போக்கப் போதுமானவன்.
Good comments
DeleteWelcome
Allah is enough to deprive the post of this callous government.
ReplyDelete