Header Ads



லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவை விரைவாக ஆரம்பிக்க ஜனாதிபதி ஆலோசனை


கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள இருதய நோய் பிரிவுடன் இணைந்த முழு வசதிகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாண வேலைகளை விசேட திட்டமாக கருதி விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

இந்த திட்டத்தின் செயற்பாடுகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்படி ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள இருதய நோய் பிரிவுடன் இணைந்த முழு வசதிகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு பத்து மாடிகளைக் கொண்டதாகும். அவற்றில் 04 மாடிகள் இருதய நோய் தொடர்பிலும், 03 மாடிகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், 02 மாடிகள் புதிதாக பிறக்கும் பிள்ளைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், மேல் மாடி பணிக்குழுவினரின் பயிற்சிக் கருத்தரங்குகளுக்காகவும் ஒதுக்கப்படவுள்ளது. 

இலங்கையில் ஆண்டுதோறும் 370,000 அளவிலான பிறப்புக்கள் நிகழ்கின்றன. சிசு மரணங்கள் 3000 ஆகும். ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் இறப்பு வீதம் 1000 க்கு 10 ஆக வருடாந்தம் 3700 நிகழ்கிறது. பிறப்பிலான இருதயநோய், நிமோனியா, குருதி கடுமையாக விஷமடைதல் மற்றும் உடலுறுப்புக்கள் செயலிழத்தல் போன்றவற்றை இந்த மரணங்களுக்கு காரணங்களாக கூறலாம். 

அத்துடன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் வெளிவாரி நோயாளர் பிரிவுக்கு 3000 க்கு மேற்பட்ட நோயாளிகள் நாளாந்தம் வருவதுடன், அவர்களில் 900 வரையானோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். 

வாழ்க்கைக்கும் மரணத்துக்குமிடையில் போராடும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றும் வசதிகளுடனான கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், இலங்கை சிறுவர் மருத்துவ நிபுணர் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி லக்குமார் பெர்ணான்டோ மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

   

No comments

Powered by Blogger.