ஞானசாரருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, திருத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக ஹேமாகம நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றப் பத்திரிகையை திருத்தங்களுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி சமர்ப்பிக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகளை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய தினத்தன்று ஞானசார தேரர் நீதிமன்ற வளாகத்தினுள் கலகத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டதாகவும் இதனை நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியுள்ளாரா? என்பது தொடர்பில் ஆராயுமாறு ஹோமாகம நீதிவான் ரங்க திசாநாயக்க கோரியிருந்தார்.
ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கோரிக்கை நேற்று முன்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது ஞானசார தேரரின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மனோகர டி சில்வா ஞானசார தேரர் அன்றைய தினம் எந்த வகையில் ஹோமாகம நீதிமன்றினை அவமதித்தார் என்பதுபற்றி சட்டமா அதிபர் தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிலை என்றார்.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் தேவையில்லாத பிரச்சினைகளை முன்வைத்து வழக்கினை தொடர்ந்தும் காலம் தாழ்த்த முயற்சிப்பதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்ற வளாகத்தினுள் நீதிமன்றினை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment