Header Ads



ரஞ்சனை ஆட்டுவிக்கும் ரணில்

ரவி கருணாநாயக்க தங்கியிருந்த சொகுசு ஹோட்டலுக்கு மாதாந்த வாடகையாக 15 இலட்சம் ரூபாவை மத்திய வங்கி ஆளுனரின் உறவினர் ஒருவரே செலுத்தியதாக, முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தான் நிரபராதி என, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆவணங்களில் தெரியவந்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவ்வாறு இருக்க குற்றம்சுமத்தப்பட்டுள்ள சம்பிக்க, ராஜித்த, ஜோன் அமரதுங்க ஆகியோர் சுதந்திரமாக இருப்பதாகவும், கம்மன்பில விளக்கமறியில் இருப்பதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். 

அத்துடன், நேற்று ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சிறந்த திரைப்படக் காட்சியை அரங்கேற்றி தனக்கு சொந்தமில்லாத வாகனம் குறித்து தகவல் வௌியிட்டதாகவும், அதற்கு எதிராக அவருக்கும் தனது தூரத்து உறவினரான ஆனந்த அளுத்கமகேவுக்கும் 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அந்த வாகனம் விளையாட்டுதுறை அமைச்சின் வாகனமாக இருப்பினும் தனக்கு சொந்தமான வாகனம் இல்லை என இங்கு தெரிவித்த மஹிந்தானந்த, ரஞ்சன் ராமநாயக்கவை ஆட்டுவிப்பது பிரதமரே எனவும் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.