சர்வதேச அல்குர்ஆன் போட்டி -இறுதிச் சுற்றில் இலங்கையர்
(விடிவெள்ளி)
டுபாயில் நடைபெறும் சர்வதேச அல்குர்ஆன் ஓதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அஹ்மத் உமர் தகுதிபெற்றுள்ளார்.
இவர் அட்டுலுகம, பண்டாரகமயைச் சேர்ந்தவராவார். தனது பத்தாவது வயதில் குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து அரை நாள் மட்டுமே பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தவர், ஆர்வமிகுதியால் தமது பன்னிரெண்டாம் வயது முதல் முழுநேரமும் குர்ஆனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தமது பள்ளிப் படிப்புடன் சேர்த்து குர்ஆனையும் மனனம் செய்து முடித்துள்ளார்.
தந்தையில்லாத அஹ்மத் உமருக்கு தனது படிப்பில் மிகவும் உறுதுணையாக இருந்து உற்சாகம் தந்தது தனது தாய் நூருல் ஷிஃபா என்கிறார்.இந்நிலையில் இலங்கையில் நடந்த குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற இவர், துபாய் சர்வதேசப் போட்டியில் பங்குபெறும் தகுதிச் சுற்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் அரசாங்கத்தின் அனுசரணையில் இப்போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இப்போட்டியில் குரல், உச்சரிப்பு, நினைவாற்றல் என்று எல்லாத் தகுதியும் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ரூபாய் ஐம்பது இலட்சத்தை முதல் பரிசாகக் கொண்டுள்ள இப்போட்டியில் முதல் ஐந்து இடத்திற்குள் வரவேண்டுமென்பதே தமது குறிக்கோள் என்கிறார் அஹ்மத் உமர்.
நல்ல உச்சரிப்புடன், சரியான குரல்வளத்துடன் தமது அமர்வை முழுமைப்படுத்திவிட்ட அஹ்மத் உமர் நினைவாற்றல் தேர்வில் ஒரு சில பிழைகளை விட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் பள்ளியில் பயன்றவர் வெற்றி பெற்று தம் நாட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
தமது வருங்காலத் திட்டம் குறித்து கேட்கும் போது, மார்க்க சட்ட திட்டங்களை சரியாகக் கற்க வேண்டும்; மனனம் செய்த குர்ஆன் வசனங்களின் விளக்கத்தையும் மனனம் செய்ய வேண்டும்; அரபி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்; மௌலவியாக வேண்டும் என்றார். இன்னும் சில தினங்களில் இதன் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment