இம்தியாஸை மீண்டும் தேசிய அரசியலுக்கு வரும்படி, முஸ்லிம் பிரமுகர்கள் அழைப்பு
-விடிவெள்ளி SNM.Suhail-
அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன் இந்த பகிரங்க அழைப்பை பேருவளையில் வைத்து விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய சிங்கள மொழி பத்தி எழுத்துக்களின் மொழிபெயர்ப்பான 'இதயம் பேசுகிறது' நூல் வெளியீடு நேற்று முன்தினம் பேருவளை பாஸியதுந் நஸ்ரிய்யா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த நூலை தமிழுக்கு மொழிபெயர்த்த என்.எம்.அமீன் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
எமது நாட்டில் சிங்கள ஊடகங்களில் அரசியல் வாதிகள் சில பத்திகளை எழுதுகின்றனர். ஆனால் தமிழ் பத்திரிகைகளில் அவ்வாறான பத்திகளை காண முடிவதில்லை. நூலின் ஆசிரியர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய பத்திகள் சிலவற்றை நாம் மொழி பெயர்த்து பிரசுரித்துள்ளோம். அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியபோதும் தனது பேனையை பயன்படுத்தி அறிவு நிறைந்த விடயங்களை புத்தக ரூபத்தில் தந்திருக்கிறார்.
அவரின் எழுத்து மூலம் தேசிய ஒருமைப்பாடு, இன் ஐக்கியம் மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றார்.
உள்நாட்டு, வெளிநாட்டு, பொருளாதார, மேலைத்தேய ஆதிக்க சக்திகள் மற்றும் மத விவகாரங்கள் பற்றி நூலாசிரியர் தனது நூலில் விபரித்துள்ளார். முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் சிங்கள மொழியில் மிகவும் தேர்ச்சிபெற்றவராவார். இவரை எமது சமூகத்தவர்கள் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
அத்துடன் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மூன்று மொழியையும் பயில வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக இலங்கையராக மாறமுடியும்.
இதேவேளை, முன்ளாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்கு நான் இங்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். நீங்கள் புத்தகம் எழுதுவதை விட இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய நீங்கள் முன்னர் மேற்கொண்டதனை போன்று மீண்டும் அரசியல் செய்ய முன் வரவேண்டும். இதனையே மக்களும் விரும்புகின்றனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கும் முக்கியஸ்தர்களும் இருக்கின்றனர். அவர்களிடமும் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரை தேசிய அரசியலில் ஒன்றிணைய அழைக்குமாறு கோரிக்கை முன்வைக்கிறேன் என்றார்.
இந்த புத்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் கௌரவ அதிதிகளாக மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, பிரதியமைச்சர்களான அஜித் பீ. பெரேரா, பாலித தெவரப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், எம்.எஸ்.எம்.அஸ்லம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூசுப் மற்றும் முன்னாள் பேருவளை நகரசபை தலைவர் மஸாஹிம் முஹம்மத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஜீ. ஹுஸைன் இஸ்மாயீல் மற்றும் ஜாமிஆ நளீமிய்யா கலா பீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோரும், முஸ்லிம் மக்களை வழிநடத்துவதற்கு சமூகத் தலைவர்கள் மிகவும் அவசியமாகின்றனர்.
அதற்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும் பொருத்தமானவர்.
அந்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நேரடி கட்சி அரசியலுக்கு வராவிட்டாலும் சமூகத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கக் கூடிய அறிவும் ஆளுமையும் கொண்டவர் இம்தியாஸ் என்றும் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment