முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் பற்றி, பௌத்த தேரர் ரணிலிடம் விளக்கம்கோரல்
-விடிவெள்ளி ஏ.ஆர்.ஏ. பரீல்-
இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கருத்து தெரிவிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “இனவாதம்” என்ற சொல்லின் வரைவிலக்கணத்தையும் அதன் எல்லையையும் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஹேகொட விபஸ்சி தேரர் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
தரம் 11 இற்கான சிங்கள மொழியும் இலக்கியமும் எனும் பாடநூலில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள மொழியும் இலக்கியமும் பாடநூலில் இவ்வாறான விபரங்கள் சேர்க்கப்பட முடியாது. இது எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளது என்பதற்கும் அவர் பிரதமரிடம் விளக்கம் கோரியுள்ளார்.
ஹேகொட விபஸ்சி தேரர் தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காததால் மீண்டும் அந்தக் கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஹேகொட விபஸ்சி தேரர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இனவாதம், மதவாதம் பேசவேண்டாம் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இனவாதத்தை தோற்றுவிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
பௌத்த குருமார்கள் நாம் இனவாதம், மதவாதம் பேசுவதில்லை. தூண்டுவதில்லை. நாம் இவ்வாறான இனவாத கருத்துக்களை எழுதுவதுமில்லை. எமது உரைகள் மக்களை தர்மத்தின்பால் ஈர்ப்பதாகவே அமையும். எமது உரைகளில் பௌத்த தர்மம், வரலாறு, வரலாற்று பின்னணிகள் பற்றியே தெரிவிக்கின்றோம். அநுராதபுர யுகம், பொலன்னறுவை யுகம் அதன் பின்னைய வரலாறுகளையே மக்களுக்கு போதிக்கின்றோம்.
நாட்டின் பௌத்த சூழல் மற்றும் எமது வரலாறு அழிக்கப்படுவது தொல்பொருள் பிரதேசங்களின் ஆக்கிரமிப்பு பற்றிக் கூறுகிறோம். இவற்றைப் பற்றி நாம் பேசினால் பிரதமர் கூறும் “இனவாதம்” எனும் குற்றச் சாட்டில் நாமும் கைது செய்யப்படலாம். அதனாலே “இனவாதம்” என்பதற்கான வரைவிலக்கணத்தையும் அதன் எல்லையையும் கோரியுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் என்போர் சமஷ்டி ஆட்சிமுறையை கோரி நிற்கிறார்கள். இதுவே இனவாதத்தைத் தூண்டும் செயல் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான முயற்சி இது எமது அரசியல் யாப்புக்கும் முரணானதாகும்.
எமது வரலாற்று உரிமைகளையும் பௌத்த மத உரிமைகளையும் பற்றி பேசுவதை நிறுத்துவதற்காகவே “இனவாதம்” என்ற சொல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாவிக்கிறார். எமது தொல்பொருள் வரலாற்றுப் பிரதேசங்கள் பற்றி பேசும் போது அது இனவாதமாகக் கருதப்படுகிறது. ஒரு பிரிவினர் நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் போது சிங்களவர்கள் இதற்கெதிராக குரல் கொடுத்தால் அது இனவாதமா? ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டியுள்ளார்.

Post a Comment