பாராளுமன்றத்தில் நேற்றும், கடும் சர்ச்சை - அந்த பொத்தான் யாருடையது..?
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒருவார காலதடை விதிக்கப்பட்ட தீர்ப்பால் சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.
நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையின் தீர்ப்பை வழங்குவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்லவைக் கோரினார்.
இதன்போது சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவை ஒருவாரகாலத்திற்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் பிரேரணையை முன்வைத்து சபையின் அங்கீகாரத்தைக் கோரினார்.
அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பி.யான சந்திரசிறி கஜதீர பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களை (சபாநாயகரை) விழித்தே தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் விசாரணை அறிக்கையை வேறொரு குழுவினர் விசாரித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி.யின் பெயரும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை தொடர்பான நம்பிக்கையின்மை எமக்கு எழுகின்றது என்றார்.
இதன்போது பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கொண்ட குழுவினை நானே விசாரணைக்காக தெரிவு செய்தேன். அவர்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கையுண்டு. இந்த சபையை வழிநடத்துபவர்கள் நியாயமாகவும் நடந்திருக்கின்றமையை நீங்களே அறிவீர்கள் என சபாயநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி குறித்த சம்பவம் இடம்பெற்றபோதுதான் தினேஷ் குணவர்த்தன எம்.பி.யை பல தடவைகள் எச்சரித்திருந்தேன் என்பதையும் சபாநாயகர் குறிப்பிட்டுக்காட்டினார்.
அதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, இந்த விசாரணையில் அரசியல் சார்புத் தன்மை இருக்கலாம் என்ற அச்சத்தை பலர் கொண்டிருக்கலாம். ஆகவே சபையில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்துமே ஒளி, ஒலி, மூலம் பதிவாகியிருக்கின்றன. அவற்றை ஊடகங்களுக்கு வழங்குங்கள். அதன் மூலம் நாட்டு மக்களும் அதனைப் பார்த்து யார் என்ன செய்தார்கள் என்றும் அறிந்து தீர்மானம் எடுப்பார்கள் என்றார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனை இருதரப்பின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு இடையிலான விடயமாகப்பார்க்காது முழுச்சபையின் கண்ணியத் தன்மையைக் கருத்தில் கொண்டு நோக்க வேண்டும்.
குறித்த தீர்மானம் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த சபையின் கண்ணிய தன்மையை பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானத்தை நெகிழ்வுத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அது குறித்து கலந்துரையாடலாம் என்றார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இவ்வாறு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றமை துரதிஷ்டவசமானதாகும். அவ்வாறான சம்பவம் இடம்பெற்றுவிட்டது. இந்த விடயத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இந்த சபையின் கண்ணியத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. பாராளுமன்ற குழுகூட்டத்தில் கட்சித்தலைவர்களிடையே இது தொடர்பான அறிக்கை குறித்து ஆராயப்பட்டுள்ளது. ஆகவே மீண்டுமொரு தடவை இவ்வாறான சம்பவம் நிகழாது உறுதிப்படுத்தப்படவேண்டும். இந்த தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் மஹிந்த ராஜபக் ஷ ஆதரவணி எம்.பி.யான பந்துலகுணவர்தன என் மீதும் தினேஷ், பிரியந்த சாந்த எம்.பிக்கள் மீதும் அநாகரிகமாக செயற்பட்டதாக ஒரு குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் இந்த சபையை தினேஷ் குணவர்த்தன பிரதிநிதித்துவம் செய்கின்றார். அவர் பொறுப்புடன் செயற்படுகின்றார். அவ்வாறிருக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 1989 இல் வாசுதேவ நாணயக்காரவுக்கு நடந்த சம்பவத்தை நீங்கள் (சபாநாயகர்) அறிவீர்கள். இது திட்டமிட்டதாகக் காணப்படுகின்றது எனக்கூறியபோது குறுக்கீடு செய்த சபாநாயகர் கரு ஜெயசூரிய எனக்கு அந்த வரலாறுகள் நன்கு தெரியும் எனக் கூறியதுடன், நீங்கள் அமருங்கள் என பணித்தார். அத்துடன் மற்றொரு மஹிந்த ராஜபக் ஷ அணியின் எம்.பி.யான மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கினார். இதன்போது குறித்த சம்பவம் இடம்பெற்று 48 மணிநேரத்தின் பின்னரே விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கின்றீர்கள்.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென மகிந்த யாப்பா அபேவர்த்தன எம்.பி. குறிப்பிட்டார். இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பி.யான பிரசன்ன ரணவீரவுக்கு ஒருவார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான தடைவிதிக்கும் பிரேரணையை சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷமன் கிரியெல்ல முன்வைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக் ஷ அணி எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டபோதும் அதனை சபை அங்கீகரித்து நிறைவேற்றியது.
மீண்டும் ஜே.வி.பி.யின் தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் எவ்வாறான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான விதைப்புரைகளை முன்வைக்க வேண்டும் எனக்கோரினார். இச்சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் ஐ.ம.சு.கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ குறித்த விசாரணை அறிக்கையானது இன்று (நேற்று) ஊடகங்களில் வெளிவந்துள்ளது. உங்களால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது. இவ்வாறு உங்களுக்கும் சபாநாயகருக்கும் தெரியாது ஊடகங்களுக்கு அறிக்கைகள் செல்வது உங்களை (சபாநாயகரை) அகெளரவப்படுத்தும் செயற்பாடாகும் எனக் சுட்டிக்காட்டினார். அதன்போது சபாநாயகர் கருஜயசூரிய அதனைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறினார்.
இதனையடுத்து சபைக்குள் பிரவேசித்த விமல் வீரவன்ச எம்.பி. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக தினேஷ் குணவர்த்தன எம்.பி. ஏற்கனவே வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஹோமாகம பகுதியின் அமைப்பாளர் பதவியையும் திலங்க சுமதிபால விரும்புகின்றார். அந்நிலையிலேயே தினேஷ் எம்.பி. மீதான குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த நாமல் எம்.பி.குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் எவ்விதமான கருத்துகளும் பெற்றுக்கொள்ள வில்லை. அவ்வாறான நிலையில் இவ்விசாரணை அறிக்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு மஹிந்த ஆதரவு அணி எம்.பி.யான சிசிர ஜெயக்கொடியும் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் தினேஷ் குணவர்த்தன எம்.பி.மீதான குற்றச்சாட்டு தொடர்பாகவும் கடுமையான தொனியில் கருத்துக்களை வெளியிட்டார். இச்சமயத்தில் அமைச்சர் தயாசிறி ஜெயகேசர எழுந்து இந்தப்பிரச்சினையையும் உங்களின் (சபாநாயகரின்) தீர்மானத்தையும் விமர்சிப்பதற்கு இடமளிக்க வேண்டாம். இதுவரையில் எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறான இடமளிப்புக்களைச் செய்யவில்லை. சபாநாயகரின் தீர்மானமே இறுதியானது. ஆனால் நீங்கள் மட்டும் தான் இவ்வாறு கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்தி குறித்த விடயத்தைவிவாதிக்கப் பார்க்கின்றனர். அது தவறானதாகும். அதற்கு இடமளிக்காதீர்கள் எனக் கூறினார். இதனையடுத்து குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பவம் தொடர்பான தீர்ப்பு நாளை (இன்று) வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றார்.
2
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சபையில் இடம்பெற்ற மோதலின்போது கழன்று விழுந்த பொத்தான் யாருடையதென கண்டறிவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமெனக் கோரிய ஐக்கிய தேசியக் கட்சியின் துஷார எம்.பி. உரிமையாளர் யார் என்பதை கண்டறிவதற்காக அந்த பொத்தானை சபையில் சமர்ப்பித்தார்.
அத்துடன் குறித்த பொத்தான் யாருடையது எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பொத்தான் பல்லாக அல்லது கையாக மாறும் நிலைமையும் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நுண் நிதியளிப்பு சட்ட மூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
என்னிடமொரு மேற்சட்டை பொத்தான் உள்ளது. அந்த பொத்தான் இந்த சபையிலிருந்து தான் எடுக்கப்பட்டது. இந்த பொத்தானின் உரிமையாளர் யார் எனச் சபையில் கோரினார்.
இதன்போது மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு அணியின் எம்.பி.யான சந்திரசிறி கஜதீர ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி குறித்த பொத்தானை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரினார். அதன்போது குறித்த பொத்தானுக்குரிய உறுப்பினர் யார் என்பதை கண்டறிந்து தாருங்கள் எனக் கூறி சபையில் பொத்தானை துஷார எம்.பி. சமர்ப்பித்து தனது உரையை முடித்தார்.
அச் சமயத்தில் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் குணசேகர கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இப்பொத்தான் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.

Post a Comment