Header Ads



யாழ்ப்பாணத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை, பாதுகாக்க அவசர உதவி தேவை


யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி இரண்டு மணி நேர அவகாசத்தில் தமது தாயகத்திலிருந்து உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டனர். சுமார் 20000 முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் நகைகள் பணம் உடமைகள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக வெளியேறி நிர்க்கதியான நிலையில் புத்தளம் இக்கிரிகொல்லாவ நொச்சியாகம அனுராதபுரம் நீர்கொழும்பு கொழும்பு பாணந்துறை போன்ற பிரதேசங்களில் தஞ்சமடைந்திருந்தனர். 1990 ஆம் ஆண்டு அவர்களுக்கு நபரொருவருக்கு வழங்கப்பட்ட அரச நிவாரணம் மாதமொன்றுக்கு 252 ரூபாவாகும். இந்த உதவி ஒரு நாளைக்கு ஒரு இறாத்தல் பாணைக் கூட வாங்க போதுமானதாக அப்போது இருக்கவில்லை. புhடசாலைகளில் வெற்று நிலத்தில் பாயின்றி குழந்தைகளும் பெரியவர்களும் தூங்க முடியாமல் தூங்கிய காலமது. பின்னர் அகதி முகாம்களில் துணியால் தைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் வெறும் மண் தரையில் படுத்துறங்கிய காலம் மறக்க முடியாதது. 

பெரும் செல்வந்தர்களும் வியாபாரிகளும் ஏழைகளாகி பட்ட துன்பங்கள் ஏராளம். அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இக்கட்டுரையின் நோக்கம் வேறாகும். 1990 இல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் 16 பள்ளிவாசல்கள் இருந்தன. ஐந்து பாடசாலைகளும் பல்வேறு பொதுக் கட்டிடங்களுடன் 1300 பிரமாண்டமான  கல் வீடுகள் அன்று காணப்பட்டன. 

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் வீடுகள் என்பன கயவர்களால் சூறையாடப்பட்டது. ஆந்த கட்டிடங்களின் கூரைகள் சுவர்கள் கதவுகள் ஜன்னல்கள் என்பன உடைத்தெடுக்கப்பட்டு தமிழர் பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்பட்டன. சில முஸ்லிம்களின் வீடுகளின் அத்திபாரங்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. 

யுத்த முடிவும், மீள்குடியேற்றமும் 

2009 மே 18 அன்று எல்;.ரீ.ரீ.ஈ யின் சகல் தலைவர்களும் கொல்லப்பட்டதன் பின்னர்  யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு சமாதானமான நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைத்த போதும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அவ்வாறான ஒரு  நிம்மதி கிடைக்கவில்லை. யாழ்ப்பாணம் திரும்பிச் சென்றவர்கள் தங்களது வீடுகள் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் என்பன அழிவடைந்திருப்பதைக் கண்டு பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பி வந்தனர். ஒரு சிலர் பள்ளிவாசல்களையும் தமது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக மீளக் குடியேறினர். 

இந்த நிலையில் அழிவடைந்து போயிருந்த பள்ளிவாசல்களை மீளமைக்கும் பணிகளை பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்து 14 பள்ளிவாசல்களை ஒருவாறு மீளமைத்து விட்டனர். இதற்காக தம்மிடம் இருந்த செல்வங்களையெல்லாம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் செலவளித்தனர். ஒரு சில வெளியூராரும் இப்பணிக்காக தமது உதவிகளைச் செய்தனர்.

தற்போதைய பிரச்சினை என்ன?
 
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களில் சிலர் மீளக் குடியேறியுள்ள போதிலும் மீள்குடியேற்ற எண்ணிக்கை போதாது. 1990 ஆம் ஆண்டு 3500 குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசத்தில் தற்போது 350 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. 16 பள்ளிவாசல்களையும் பாதுகாக்கவும் முறையாக செயற்படுத்துவும்  இந்தத் தொகை போதாது. மேலும் இவர்கள் ஒரு சில பள்ளிகளைச் சுற்றியே அதிகமாக குடியேறியுள்ளனர். இதனால் பள்ளிவாசல்களில் தொழுவதற்கு போதியளவு ஜமாத்தார் இல்லை.   

முஸ்லிம்கள் மீளக்குடியேறாவிட்டால் என்ன நடக்கும்?

நாம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது அவர்கள் பல்வேறு வெளியேற்றங்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளனர். 9 ஆம் நூற்றாண்டில் கீரிமலை சேத்தான்குளம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  1480 களில் சாவகச்சேரியில் இருந்து கனகசூரிய சிங்கை ஆரியன் என்ற அரசனால் வெளியேற்றப்பட்டுள்ளனர். 1620 இல் யாழ்ப்பாணம் கோட்டை சின்னக் கடை போன்ற பிரதேசங்களிலிருந்த 20000 முஸ்லிம்கள் போர்த்துக்கீசரால்  வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 3000 பேர் போர்;த்துக்கீசருடனான சண்டைகளில் கொல்லப்பட்டுள்ளனர். 1744 இல் நல்லூரிலிருந்து தமிழர்களால் வெளியேற்றப்பட்டனர். 

இந்த வெளியேற்றங்களின் பின்னர் முஸ்லிம்களால் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியவில்லை. அதனால் அவர்களின் பள்ளிவாசல்கள் கத்தோலிக்க தேவாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. 1620 இல் முஸ்லிம்களுக்கு சொந்தமான 22 பெரும் பள்ளிவாசல்கள் இருந்ததாகவும் அவற்றை போர்த்துக்கீசப் படைகள் அழித்து தேவாலயங்களை நிறுவியதாகவும் போர்த்துக்கீச வரலாற்றாசிரியர் குவிரோஸ் யாழ்ப்பாணத்தின் வரலாறு என்ற நூலில் பதிவிட்டுள்ளார். நல்லூரில் இருந்த பள்ளிவாசல் இன்று நல்லூர் கந்தசாமி கோவிலாக காணப்படுகின்றது. கோவிலின் உள்ளே சேகு சிக்கந்தப் இப்ராகிம் என்ற முஸ்லிம் படைத்தளபதியின் அடக்க ஸ்தலமும் இன்றும் காணப்படுகின்றது. 

எனவே தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல்களை பாதுகாப்பது இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரினதும் கடமையாகும். அவ்வாறு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுக்களாகவோ அல்லது நிறுவன ரீதியாகவோ செய்யாது விட்டால் எதிர்காலத்தில் அவை கைவிடப்பட்டு வேறு நிலமைகளுக்கு உள்ளாகக் கூடிய ஆபத்துகள் உள்ளன.
எவ்வாறு பாதுகாப்பது? 

யாழ் சோனகதெருவிலுள்ள 16 பள்ளிவாசல்களில் 14 பள்ளிவாசல்கள் ஏற்கனவே மீளமைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பள்ளிவாசல்கள் மீளமைக்கப் பட வேண்டியுள்ளது.  அவை ஐதுறூஸ் மகாம் பள்ளி மற்றும் சாபி நகர் பள்ளிவாசல் என்பனவாகும்.. மேலும் மக்கள குறைவாக குடியேறியுள்ள பள்ளிவாசல்களாக சின்னப்பள்ளி ஐதுறூஸ் மகாம் பள்ள காமால் பள்ளி சிவல பள்ளி சாபி நகர் பள்ளி மானிப்பாய வீதி பள்ளி சின்ன முஹிதீன் பள்ளி என்பவற்றை குறிப்பிடலாம். இந்த பிரதேசங்களில் காணிகள் வாங்கி அதில் வீடுகளை அமைத்து புத்தளத்திலுள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களையோ அல்லது வேறு ஊர் முஸ்லிம்களையோ கொண்டு சென்று குடியேற்ற வேண்டும். 

10 முதல் 20 பேர்ச் காணியொன்றை 25 முதல் 40 இலட்சத்துக்குள் வாங்கலாம். இதில் தொடர் வீடுகளை ஐந்து ஐந்தாக அமைக்கலாம். இவ்வாறு ஐந்து தொடர் வீடுகளை அமைக்க 40 முதல் 50 இலட்சம் வரை செலவாகும். தனி வீடுகளாக அமைப்பதாயின் இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டுக்கு 12 முதல் 14 இலட்சம் வரை செலவாகும். 

இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல்களைப்  பாதுகாக்க முன்வருமாறு யாழ்ப்பாண முஸ்லிம்;கள் சார்பில்  நாம் இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியே ஐரொப்பிய நாடுகளிலும் அமெரிக்கா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை  முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.  இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் உங்களுக்கு இது சம்பந்தமான மேலதிகமான ஆலோசனைகள் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் உதவிகள் என்பன எம்மால் இன்ஷா அல்லாஹ் வழங்கப்படும். 

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 

முஹம்மது  ஜான் (0094) 0773292430 

அப்துல் ரஹ்மான் 0779070510 

எமது தொலைபேசி ஓய்வில் இருந்தால் தங்கள் செய்தியை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பவும். நாம் உங்களுடன் இன்ஷா அல்லாஹ் தொடர்பு கொள்வோம்.

1 comment:

  1. Timely article.. Brothers,it's each and every Muslim's responsibility to save and revive the mosques.

    ReplyDelete

Powered by Blogger.