தாஜுதீன் கொலை புதிய கட்டத்திற்கு நகர்வு, இரகசிய வாக்குமூலத்திற்கு பொலிஸ் அதிகாரி தயார்
(Vi) பிரபல றக்பி வீரர் மொஹம்மட் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா, அந்த படுகொலை குறித்து தான் அறிந்த அனைத்தையும் இரகசிய வாக்கு மூலமாக நீதிவானுக்கு வழங்க தயார் என அறிவித்துள்ளார். இதற்கான விருப்பத்தை அவர் சார்பாக நேற்று மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண ஊடாக அவர் வெளிப்படுத்தினார்.
இதனிடையே வஸீம் தாஜுதீனின் படு கொலையை மூடி மறைத்து அதனை விபத்தாக காட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் யாருடைய, எந்த குழுவின் தேவைக்காக அப்படி மறைத்தனர்?,அதற்கான காரணம் என்ன?
அவர்களுக்கு அது தொடர்பில் உத்தரவு வழங்கியது யார்? போன்றவற்றை வெளிப்படுத்திக்கொள்ள தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவானுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அத்துடன் சாட்சியாக கண்டுபிடிக்கப்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளை கனடா, இங்கிலாந்து ஆய்வு கூடங்களுக்கு அனுப்புவது குறித்த பேச்சுக்கள் இறுதிக் கட்டதை எட்டியுள்ள நிலையில் 5 சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இருவட்டுக்களை விரைவில் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு அறிவித்தது.
இந் நிலையில் வஸீம் தாஜுதீனின் கொலையைத் தொடர்ந்து அவரது சடலம் மீது முதல் பிரேத பரிசோதனை செய்து சமர்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து இலங்கை மருத்துவ சபை முன்னெடுத்துள்ள விசாரணையின் முடிவும் அடுத்த கட்ட விசாரணைக்கு மிக அவசியமானது எனவும் புலனாய்வுப் பிரிவு நீதிவானுக்கு அறிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட வஸீம் தாஜுதீனின் மரணம் குறித்த விசாரணை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி விடயங்கள் விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சந்தேக நபர்களில் ஒருவரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவின் சட்டத்தரணி அஜித் பத்திரண ஆகியோரால் மன்ருக்கு முன்வைக்கப்பட்டன.
நேற்று காலை 9.30 மணிக்கு புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நடவடிக்கைகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் அரசின் சிரேஷ்ட சட்டவாதியான டிலான் ரத்நாயக்க மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இரு சார்ஜன் தர அதிகாரிகளும் மன்றுக்கு வருகை தந்திருந்தனர்.
கைதாகியுள்ள சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா சிறைக் காவலர்களால் மன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தார். நேற்றைய தினம் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர் பலரும் மன்றில் வழக்கு விசாரணைகளை அவதானிக்க வருகை தந்திருந்தனர். எவ்வாறாயினும் சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேராவின் சட்டத்தரணி மன்றுக்கு வருகை தர தாமதமானதால் வழக்கு சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 30 நிமிடங்களின் பின்னர் வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரன மன்றில் ஆஜரானார்.
எவ்வாறாயினும் வழக்கானது விசாரணைக்கு வந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சிறப்பு மேலதிக விசாரணை அறிக்கை ஒன்று நீதிவான் நிஸாந்த பீரிசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில்,
' வஸீம் தாஜுதீன் கொலை விவகாரத்துடன் இணைத்ததாக முன்னெடுக்கப்ப்ட்டு வரும் சிறப்பு விசாரணைகளில் இது வரை 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரினதும் வாக்கு மூலங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக உள்ளது. இவர்களில் பலர் மீளவும் விசாரணை செய்யப்பட்டனர். அதன்படி வஸீம் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு உயர் பொலிஸ் அதிகாரிகளின் இடையூறு, அழுத்தம் இருந்தமை தொடர்பில் உறுதியாகிறது. இந்த அழுத்தத்தினை குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் எதற்காக, என்ன காரணத்துக்காக, யாரின் தேவைக்காக செய்தார்கள் என்பது குறித்து நாம் தற்போது தீவிர விசாரணைகளை செய்துவருகிறோம்.
அத்துடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா, வஸீமின் கொலையை அடுத்து, வஸீம் தாஜுதீன் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் குறித்த அறிக்கை ஒன்றினை குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து பெற்று ஆய்வு செய்துள்ளார். இந்த அறிக்கையை அவர் பெற்றது தொடர்பில் எமக்கு பலமான ஒரு சந்தேகம் உள்ளது. அத்துடன் கிருலப்பனை பகுதியில் வஸீமுக்கு சொந்தமான பணப் பை சிக்கிய போதும் அது தொடர்பில் இந்த அதிகாரி விசாரணைச் எய்யாமல் இருந்தமையானது எமது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கின்றது.
இதனால் சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி கொலைக்காரர்களுடன் சேர்ந்து இந்த கொலைக்கு சதி செய்தாரா? அல்லது அதனை அவர் முன் கூட்டியே அறிந்திருந்தாரா போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்த மேலதிக விசாரணைகள் அவசியம் அவற்றை நாம் தற்போது முன்னெடுக்கின்றோம். சம்பவம் தொடர்பில் பலரிடம் நம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளோம். பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பல சிவில் மக்களிடமும் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளோம். அது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மன்றில் பிரசன்னமாகியிருந்த அரச சிரேஷ்ட சட்டவாதி, டிலான் ரத்நாயக்க மன்றில் கருத்துக்களை முன் வைத்தார். ' வஸீம் படுகொலை தொடர்பில் சில உயர் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் நாம் மிகத் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் குற்றப் புலனய்வுப் பிரிவினரால் சாட்சியாக மீட்கப்ப்ட்ட சி.சி.ரி.வி. காணொளிகள் அடங்கிய இருவெட்டுக்களை கனடா மற்றும் இங்கிலாந்து ஆய்வுகூடங்களுக்கு அனுப்புவது குறித்தான நடவடிக்கைகள்தொடர்பில் அந் நிறுவனங்களுடன் தொடர்பேச்சுக்களை நடத்தி இணக்கப்ப்ட்டுக்கு வந்துள்ளோம். அவை மிக விரைவாக அனுப்படும்.
இதனை விட நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு, தற்போது தொலைபேசி நிறுவனத்தின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. அவர்கள் சில தொலைபேசி வலையமைப்பு தகவல்களை வழங்கவேண்டியுள்ளது. அதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நான் மன்றைக் கோருகிறேன். அத்துடன் எமது விசாரணைகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த இலங்கை மருத்துவ சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள, வஸீமின் முதல் பிரேத அறிக்கை குறித்தான விசாரணைகளின் தன்மையை அறிவது அவசியம். எனவே அது குறித்த அறிக்கையை எமக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
அத்துடன் இந்த விசாரணைகள் மிக சூட்சுமமாக முன்னெடுக்கப்படுவதால், கைதாகியுள்ள சந்தேக நபருக்கு பிணை வழங்க வேண்டாம். ஏனெனில் பிணைச் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் இவருக்கு பிணை வழங்கினால் விசாரணைகள் பாதிக்கப்படும். அத்துடன் பொதுமக்களிடையே கொந்தளிப்பும் ஏற்படும். எனவே பினை வழங்குவதை எதிர்க்கிறேன். என்றார்.
இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவின் சார்பில் மன்றில் பிரசன்னமான சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரன தனது தரப்பு நியாயங்களை முன் வைத்து பிணைக் கோரினார். ' குற்றப் புலனாய்வுப் பிரிவு உங்களையும் உங்கள் மன்றையும் சில திரிவு படுத்தப்பட்ட கருத்துக்களை முன்வைத்து தந்திரமாக ஏமாற்றுகிறது. இந்த சந்தேக நபருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் சில சரத்துக்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த சரத்துக்கள் எவையும் தண்டனை சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிவான் நீதிமன்ற நீதிவானுக்கு பிணை வழங்க முடியாத 16 ஆவது பகுதிக்குள் வரவில்லை. எனவே சந்தேக நபருக்கு பினை வழங்கும் அதிகாரம் உங்களுக்கு உள்ளது.
எனது சேவை பெறுநர் 16 வருடங்களாக பொலிஸ் பரிசோதகர். இந்த சம்ப்வத்தின் பின்னர் பருத்தித் துறைக்கு இடமாற்றப்ப்ட்டார். அதன் பின்னர் சில காரணங்களுக்காக இடை நிறுத்தப்பட்டு அண்மையிலேயே மீளவும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். குற்ரப் புலனாய்வுப் பிரிவு சொல்வதைப் போன்று இவர் விசாரணையை மூடி மறைத்திருந்தால் அல்லது சதி செய்திருந்தால் இன்று இவர் பொலிஸ் பரிசோதகர் இல்லை, பொலிஸ் மா அதிபராக இருந்திருப்பார். இந்த சம்ப்வம் இடம்பெற்ற போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொடுத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே, விடுமுறையில் வீட்டில் இருந்த எனது சேவை பெறுநர் விசாரணைகளுக்காக ஸ்தலம் சென்றுள்ளார். அத்துடன் விசாரணையொன்ரின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் செய்துள்ளார்.
இதன்போதே வஸீமின் பணப் பை கிருலப்பனை பொலிஸாருக்கு கிடைத்தது. இதனையடுத்து பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், உதவி பொலிஸ் அத்தியட்சர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோருடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அவசர சந்திப்பை நடத்தியுள்ளார். இதன்போது பணப் பை விவகாரத்தை உடன் அறிவிக்கவில்லை எனக் கூறி கிருலப்பனை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு குற்றப் பத்திரிகையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னரேயே எனது சேவை பெறுநருக்கு இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை செய்ய வேண்டாம் எனவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதனைப் பார்த்துக்கொள்ளும் எனவும் உயர் பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைகளிலும் உயர் அதிகாரிகளை தாண்டியும் இந்த விசாரணையில் சாதரண பொலிஸ் பரிசோதகரான எனது சேவை பெறுனருக்கு கையடிக்க முடியுமா?
உன்மையில் எனது சேவை பெறுநரிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு எதனை எதிர்ப்பார்க்கிறது என எமக்குத் தெரியாது. ஆனாலும் உயர் அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நாம் குர்ரப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமாக வழங்கியுள்ளோம். அத்துடன் குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய இந்த சம்பவம் குறித்து எனது சேவை பெறுநர் நீதிவானுக்கு வாக்கு மூலம் வழங்கவும் தயாராக உள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய தகவல்கள் அனைத்தும் உண்மை. அதனையே 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் இரகசிய வாக்கு மூலமாக நீதிவானுக்கு வழங்கவும் நாம் தயார். அதனால் எந்த நிபந்தனையின் கீழோ எனது சேவை பெறுநருக்கு பிணை வழங்குமாறு கோருகிறேன். என்ரார்.
இதனையடுத்து அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க, கோரிக்கையை எதிர்த்தார். சந்தேகநபர் கொலை சதியுடன் தொடர்புபட்டுள்ளாரா என விசாரணை இடம்பெறும் போது பினை வழங்கினால் அது விசாரணைக்கு பாதிப்பாக அமையும் என தெரிவித்தார்.
இதனையடுத்து இலங்கை மருத்துவ சபை சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, நீதிவானின் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி வழங்கிய உத்தரவுக்கு பதிலளித்தார். வஸீமின் சடலம் மீது முதலில் பிரேத பரிசோதனை செய்த வைத்தியர் ஆனந்த சமரசேகர தொடர்பிலும் அவர் குழு தொடர்பிலும் மருத்துவ சபையின் விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதில் ஆனந்த சமரசேகர குழுவினரிடம் மேலோட்டமாக பார்க்கும் போதே விசாரணைக் குரிய விடயங்கள் தென்படுவதால் அவர்களிடம் ஒழுக்காற்று விசாரணை ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விசாரணை ஜூன் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நிசாந்த பீரிஸ் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக கோரிய கோரிக்கைகளை ஏற்று தொலைபேசி நிறுவனத்துக்கு தொலைபேசி வலையமைப்பு தகவல்களை வழங்கவும், வைத்திய சபைக்கு விசாரணை அறிக்கையை சமர்பிக்கவும் உத்தர்வு பிறப்பித்தார். அத்துடன் பொது மக்கள் குழப்பம் ஏற்படலாம் என்ர காரணத்தை கருத்தில் கொண்டும் விசாரணைகள் நிறைவுபெறாததை சுட்டிக்காட்டியும் பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்கவின் பினைக் கோரிக்கையையும் நிராகரித்தார். அத்துடன் சந்தேக நபரின் குற்றவியல் சட்டத்க் கோவையின் 127 ஆவது சரத்துக்கு அமைவாக வாக்கு மூலம் வழங்கதயார் என்ற கூற்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அவதானம் செலுத்த வேண்டும் என நீதிவான் அறிவித்தார். இதனையடுத்தே இது குறித்த அடுத்த கட்ட விசாரணையை மே 26 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்தார்.

Post a Comment